சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள்
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பலருக்கு நிறைய யோகங்களைத் தரப்போகிறது. பல அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்கப்போகிறது. சுப கிரகமான குரு பகவான் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறந்து சில நாட்களிலேயே இடப்பெயர்ச்சியாகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் சோபகிருது வருடம் சித்திரை 8ஆம் தேதி ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்க குருவும் கூட்டணி சேருவதால் சில ராசிக்காரர்களுக்கு புதிய யோகமும் அதிர்ஷ்டமும் கைகூடி வரப்போகிறது.
புத்தாண்டின் துவக்கத்திலேயே குரு பெயர்ச்சி நிகழ்வதால் குருவின் பார்வை பயணத்தால் துலாம் முதல் மீனம் வரையில் பிறந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
துலாம் - களத்திர குரு
துலாம் ராசிக்காரர்களே..ஏப்ரல் மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் குரு அமர்வது அதிக நன்மையை தரப்போகிறது. உங்கள் ராசி அதிபதி அசுர குரு சுக்கிரன் என்பதால் தேவ குரு உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை செய்யப்போவதில்லை. இருந்தாலும் இந்த குரு பெயர்ச்சியால் திருமண யோகமும் குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. குரு பகவான் தனது 5ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் உங்கள் ராசியையும் ஒன்பதாம் பார்வையால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தையும் பார்க்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கினால் லாபமும் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் மூலம் ஆலய தரிசனம் செய்வீர்கள். பண வருமானம் அதிகரிக்கும். புது வீடு, வாகனம் யோகம் வரப்போகிறது. குருவின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கப்போகிறது. குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கவும். மேதா தட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும். பட்டீஸ்வரம் சென்று ராகு காலத்தில் துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம் - ருண ரோக சத்ரு குரு
விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு குரு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10,12,2 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனநிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும் கூடவே கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு வேலைக்காகவும் வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.
தனுசு - பூர்வ புண்ணிய குரு
தனுசு ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். ஏற்கனவே பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவான் பயணம் செய்கிறார். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது கூடவே 9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. தடைகள் நீங்கி சுப காரியம் கைகூடி வரும். திருமணம் நடைபெறும். சோபகிருது வருடத்தில் திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு தங்க நகைகள் சேரும் ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். கடன் வாங்கி தொழில் செய்து நஷ்டத்தை சந்தித்தவர்களுக்கு இனி எல்லாம் பொன்னாகும். பொருளாதார நிலை உயரும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும் சகல நன்மைகளும் உண்டாகும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கப்போகிறது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவீர்கள். குரு ஸ்தலமாக திகழும் திருச்செந்தூருக்கு சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.
மகரம் - சுக ஸ்தான குரு
மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். நான்காம் வீட்டு குரு நல்ல செய்திகளை தேடி தருவார். வீடு கட்டும் யோகத்தை தரப்போகிறார் குரு பகவான். ஏழரை சனி நீடித்தாலும் குருபகவானின் பார்வை சாதகமான இடங்களில் விழுகிறது. வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காரணம் குருபகவானின் பார்வை 8,10,12ஆம் வீடுகளின் மீது விழுவதால் வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக மாறும். கால்வலி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தூக்க பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது. திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கும்பம் - தைரிய குரு
கும்ப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குடும்ப ஸ்தான குரு நிறைய பண வரவை கொடுத்தார். ஏழரை சனியில் ஜென்ம சனிகாலமாக இருந்தாலும் உங்களுக்கு குருபகவானின் பார்வை குடும்பத்தில் குதூகலத்தை தரப்போகிறது. எந்த ஒரு காரியம் என்றாலும் உங்களுக்கு தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்படையும். பெற்றோர்களின் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். அனுமனுக்கு சனிக்கிழமைகளில் வெண்ணெய் சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
மீனம் - குடும்ப குரு
மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருந்த ராசி நாதன் குருபகவான் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குடும்ப குரு நிறைய சுபிட்சங்களையும் தரப்போகிறது. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். அள்ள அள்ள குறையாத அளவிற்கு பணம் வரும். குரு பகவானின் பார்வை, 4,8,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் பார்வையும் பயணமும் சாதமாக இருப்பதால் நல்ல வேலை கிடைக்கும். வீடு கட்டும் யோகம் தேடி வரும். இந்த ஆண்டு புது வீட்டிற்கு கிரகப்பிரவேஷம் செய்து குடியேறுவீர்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான ஆண்டு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. வெளிநாடு சென்று படிக்கும் யோகம் வரப்போகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் நலம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். இந்த சோபகிருது ஆண்டு நிறைய அதிசய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தப்போகிறது.