கொரோனா மீண்டும் வரும்... எல்லைப்பிரச்சினை ஏற்படும் - சுபகிருது பஞ்சாங்கம் கணிப்பு
சுபகிருது ஆண்டில் நாட்டில் எல்லைப் பிரச்னை தோன்றும், அரசியல்வாதிகள், நடிகர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு கண்டம் உருவாகும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வர வாய்ப்புள்ளதாக தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களுக்கு உடல்நல பாதிப்பு உருவாகி கண்டம் ஏற்படும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
சுபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஸ்ரீஆபத்துதாரண ஆஞ்சநேயர் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுபகிருது ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை கோயில் தலைமை அர்ச்சகர் கிருஷ்ணன் பட்டாச்சாரியார் படித்தார். அப்போது அவர் புதிய ஆண்டில் விலைவாசி மேலும் உயரும். புதிய வகை வியாதிகள் தோன்றும் என்று கூறினார்.

கொரோனா நோய் தொற்று
கொரோனா தொற்றுநோய் திரும்பவும் வர வாய்ப்புகள் உண்டு. அதிக மழை பெய்து கடலில் வீணாக கலக்கும். அதிக மழை காரணமாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும். மழை, வெள்ளம் புயலால் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

வெள்ளச் சேதம்
மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு அதிக அளவில் அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் பிறக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பின்னர் சுமுக முடிவு ஏற்படும். இந்தியா, பாகிஸ்தான், சீனா எல்லை பிரச்சினை பெரும் அளவில் வெடிக்கும்.

கண்டம் ஏற்படும்
கரும்பு, உளுந்து, எள் போன்ற கருப்புநிற தானியங்கள் அதிக விளைச்சல் இருக்கும். அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களுக்கு உடல்நல பாதிப்பு உருவாகி கண்டம் ஏற்படும் என்றார். பின்னர், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல், நீர்மோர், பானகம் ஆகியன வழங்கப்பட்டது.

பஞ்சாங்கம் கணிப்பு பலிக்கும்
தமிழ் பஞ்சாங்கத்தில் கணிப்பது பெரும்பாலும் பலிக்கும். சென்னை மழை வெள்ளம், புயல் போன்றவற்றை பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. அதே போல புதிய வகை வைரஸ் உருவாகும் என கொரோனா நோய் பற்றி பஞ்சாங்கம் கணித்திருந்தது பலித்தது. இந்த ஆண்டு கொரோனா நான்காவது அலை உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். அதே போல பஞ்சாங்கத்திலும் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

19 புயல்கள் கனமழை வெள்ளம்
தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் உதயகுமார் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார்.இதில், 'வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி 7 அதிதீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகையில் பல கடலோர பகுதியில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

உச்சம் தொடும் பெட்ரோல், டீசல் விலை
இதனால் விவசாயம் பாதித்தாலும் தென்னை, மா, பலா, வாழை விளைச்சல் நன்றாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை மேலும் உச்சத்தை தொடும். கோயில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகும். சில அரசியல் தலைவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை புதிய தொழிலில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.மக்கள் வருவாய் வளர்ச்சிக்கு மேலும் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் உருவாகக்கூடும்.

வெட்டுக்கிளிகளால் பாதிப்பு
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு சீனா, பாகிஸ்தான் பொறாமையில் பல சூழ்ச்சிகள் செய்யும். பின் அது பயனின்றி போகும். எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும். வெட்டுக்கிளிகளால் கோதுமை பயிர் சேதமாகும். மின்காந்த அலைகளால் அலைபேசி டவர் சேதமாகும். இந்தியா கடல் வழியாக செல்லும் ஒரு வெளிநாடு சரக்கு கப்பல் நள்ளிரவில் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது. புதிய வைரஸ் பரவி மக்கள் காய்ச்சலில் பாதிக்கப்படுவர் என வாசித்துள்ளார்.












Click it and Unblock the Notifications