தைப்பூசம் 2020: முருகனின் அறுபடை வீடுகளிலும் அலைகடலென திரண்ட பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி: அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில், தைப்பூச விழாவைக் காண பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், கடலில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் தடுக்கி விழுந்தால், பாதயாத்திரை பக்தரைத் தான் பார்க்க முடிகிறது. கோவிலின் சன்னதி தெருவில் உள்ள அனைத்து சமுதாய மடங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.
ஆறுமுகக்கடவுளான முருகப் பெருமானுக்கு தமிழ் மாதப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, சூரசம்ஹாரம், தைப்பூசம், மாசி மகம் மற்றும் பங்குனி உத்திரம் என மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வாடிக்கை. அதிலும் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு படைவீடுகளிலும் ஒவ்வொரு திருவிழா விமரிசையாக நடைபெறும்.
குறிப்பாக, முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா, இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா, மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா மற்றும் பங்குனி உத்திர திருவிழா என ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு விதமான திருவிழாவுக்கு பிரசித்து பெற்று விளங்குகிறது.
மலேசியாவில் தைப்பூசம் கோலாகலம் - கொரோனாவைரஸ் அச்சத்தை மீறி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
முருகக்கடவுள்
தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவைக் காண பழநி, மற்றும் திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக வருவதுண்டு.
பாதயாத்திரை
மூன்றாம் படைவீடான பழநியில் இன்று தேரோட்டம் நடைபெறுவதைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி பாதயாத்திரை செல்வது போல், போல் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் அனைவரும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வருவதுண்டு.
பக்தர்கள் வேண்டுதல்
தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நீளமான அலகுகள் குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் பாதயாத்திரையாக திருச்செந்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். சில பக்தர்கள் சுமார் 15 அடி நீளமுள்ள வேலை அலகு குத்திக்கொண்டு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல், பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகப் பெருமானின் உருவப் படத்தை வைத்து, கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம் பாடிக்கொண்டும் பாதயாத்திரை வருகின்றனர்.
அலைகடலென திரண்ட பக்தர்கள்
இன்று தைப்பூச விழாவைக் காண பாதயாத்திரையாக வந்துள்ள பக்தர்கள், கடலில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் தடுக்கி விழுந்தால், பாதயாத்திரை பக்தரைத் தான் பார்க்க முடிகிறது. கோவிலின் சன்னதி தெருவில் உள்ள அனைத்து சமுதாய மடங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.
அதிகாலை முதலே வழிபாடு
தைப்பூச நாளான இன்று அதிகாலை, வழக்கம் போல, அதிகாலை 3 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணியளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணியளவில் உச்சிக்காலை அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணியில் கோலாகலம்
திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் சென்றனர். திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று இரவு, 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். இதேபோல திருப்பரங்குன்றம், சுவாமிமலை,பழமுதிர்சோலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.