ஆடி மாத தேய்பிறை அஷ்டமி: சனிக்கிழமையில் கால பைரவரை வழிபட்டால் என்னென்ன நன்மைகள்
சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமானது. ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் சிவபெருமானையும், பைரவரையும் வழிபட இல்லத்தில் நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
சென்னை: காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி நன்னாள். இன்று ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி சனிக்கிழமையில் வருவது சிறப்பு. சனிபகவானின் குரு காலபைரவர் என்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபட சனி தோஷங்களும், சகல தோஷங்களும் நீங்கும். இன்றைய தினம் சனிக்கிழமையுடன் பைரவருக்கு உகந்த பரணி நட்சத்திரம் இணைந்து வருவதால் மறக்காமல் மாலை நேரத்தில் சிவ ஆலயம் சென்று பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும்.
சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்ன?..ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதி எல்லாம் மறந்து போச்சா!
ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நீலகண்டாஷ்டமியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. கால பைரவர் வழிபாடு நம்மை எல்லா வகையான கெடுதல்களில் இருந்தும் காப்பாற்றும். கால பைரவர் வழிபாடு நமக்கு அரண் போன்றது. பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
காக்கும் கடவுள் பைரவர்
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.
பரணியில் வழிபட நன்மை
பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். பைரவர் பரணியில் அவதரித்தவர். இன்றைய தினம் தேய்பிறை அஷ்டமியுடன் பரணி நட்சத்திரமும் மாலையில் இணைந்து வருவது சிறப்பு. சிவ ஆலயத்தில் உள்ள பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்கு செவ்வரளி மலர்களால் மாலை சாற்றி எள் தீபம் அல்லது மிளகு மூட்டை கட்டி மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்கள் தொல்லை ஒழியும். எம பயம் என்பது நீங்கும். எதையும் துணிச்சலுடன் முடிவெடுக்கக் கூடிய தைரியம் உண்டாகும்.
நவகிரக தோஷம்
பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. மேஷ ராசிக்காரர்கள் இவர் தலையினைப் பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கணுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
செல்வ செழிப்பு
குடும்ப நிம்மதிக்கும், செல்வ செழிப்பை பெறவும் இன்றைய தினம் ஆடி மாத சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், பைரவர் சந்நிதிக்கு சென்று பைரவரையும் வழிபடலாம். வீட்டு பூஜை அறையில் வந்து சிவபார்வதி படம் மற்றும் சொர்ணாகர்ஷன பைரவர் படத்தை வைத்து தயிர் சாதம் நைவேத்தியம் செய்து முறையாக வழிபட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.
அபிஷேகம்
குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீர ஈசனை தரிசனம் செய்து அவருக்கு அபிஷேகம் செய்வதற்கு உரிய அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலமும் சிறப்பான பலன்களை பெறலாம். அபிசேகப்பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சொத்து தகராறு, நிலத்தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய் மூடியில் நெய் ஊற்றி சிகப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்றி வழிபடலாம்.
படையல் போட்டு வழிபாடு
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி பூஜிக்க ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும்.
பஞ்ச எண்ணெய்களைக் கொண்டு பஞ்ச தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
செல்வ வளம் பெருகும்
தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். வீட்டில் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வைத்து அவருக்கு உரிய மந்திரங்களை ஜெபித்து, தயிர் சாதத்தை நிவேதனம் வைத்து தூப, தீப ஆராதனைகள் காண்பித்து வழிபட்டு வரலாம்.
நல்லெண்ணெய் தீபம்
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் தேய்பிறை அஷ்டமியான இன்றைய நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி வணங்க எதிரிகள் தொல்லை நீங்கும்.