Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்மநாபா ஏகாதசி விரதம்: தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வெள்ள சேதத்தில் இருந்து காக்கும் விஷ்னு வழிபாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை 20/09/2018 வியாழக்கிழமை பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் மற்றும் அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் தேவ சயன ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை பரிவர்தனா ஏகாதசி மற்றும் பத்மநாபா ஏகாதசி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நாளை ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்னுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்னு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோக்‌ஷத்தை அடைவார்கள் என நம்பபடுகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீரினால் ஏற்படும் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை!

Tomorrow is Padmanabha Ekathasi to get the blessings of Lord Vishnu and to remove all our sin

ஏகாதசி விரதம்:

பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும்.

வானியல் விளக்கம்:

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு:

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப் படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, \'முரன்\' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசிநாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும். அந்த விதத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி \"பத்மநாபா\' என்று அழைக்கபடுகிறது. இந்த பத்மநாபா ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம் . தண்ணீர் பற்றாகுறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பிரச்சனை தான். தண்ணீர் காடாக நிறைந்திருந்தாலும் பிரச்சனைதான் என்பதை சமீபத்திய கேரள மழை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கும்!

பத்மநாபா ஏகாதசி தோன்றிய கதை:

முன்னொரு சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர் மாந்தாதா தர்மம் தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். இருந்தாலும் ஒரு முறை அவரது நாட்டில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. வறட்சியும் பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் காரணம் அறியாது கலங்கினார். அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.

பஞ்சத்தால் மக்கள் படும் துயர் தாங்காத மன்னர் ஆங்கீரச முனிவரைத் தரிசித்து துயரம் நீங்க வழி கேட்டார். அவரிடம் தனது கஷ்டத்தை அவர் எடுத்து கூறிய போது, முனிவர் தனது தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்யத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார். அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார். கொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் சயன ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்னை தீரும் என்றார். நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்க சொன்னான். விளைவாக நாட்டில் வரட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபீக்ஷம் ஏற்பட்டது.

தேவ சயன ஏகாதசி விரத பலன்கள்:

தேவ சயன ஏகாதசி விரதமிருந்தால் எந்தொரு பாபமாக இருந்தாலும் தொலையும். ஆன்மீக சக்தி அதிகரிக்கும். அதில் ஒரு முழுமை கிடைக்கும். நடுவில் இருக்கும் தடை கற்கள் நீங்கும். பாபத்தினால் விளையும் தீமைகள் மறையும். வாழ்வு வளம் பெரும். இப்படியாக கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு தேவ சயன ஏகாதசியை பற்றி எடுத்தியம்பியதாக பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

இந்த விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். மேலும் அதிக மழையால் தண்ணீரினால் ஏற்படும் அழிவிலிருந்தும் நம்மை காக்கும். அடுத்து தமிழகத்தில் தொடர்ந்து மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் தமிழ்நாட்டில் வெள்ள சேதம் ஏற்படாமல் காக்கும்.

ஏகாதசி விரதமுமும் விஷ்னு சஹஸர நாம பாராயணமும்:

பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது.பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாகஅமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரை தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான பலனைத் தரும் என்பார்கள்.சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று.

இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது. சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹாஸ்ரனாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே மகாபாரதத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்னு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேஷமாகும். விஷ்னு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயற்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே பெருமாளுக்குகந்த மாதமான புரட்டாசியில் வரும் பரிவர்தனா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி மற்றும் சயனி ஏகாதசியன்று விஷ்னு சகஸ்ரநாமம் பாராணம் செய்து பகவான் ஸ்ரீ விஷ்னுவின் அனுகிரஹத்தை பெருவதோடு நீரினால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபடுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+