வைகாசி விசாகம் திருவிழா..திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி விசாகம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர்: வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதையாத்திரையாக நடந்து வந்தும் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதும் ஐதீகம்.
இந்நாள் ஜோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா - பக்தர்கள் சர்ப்பக் காவடி எடுத்து வர தடை
முருகன் ஆலயங்களில் விழா
முருகன் அவதரித்த இந்த வைகாசி விசாக நாளில் உலகமெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் என அழைக்கப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு காலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூரில் கூட்டம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் இன்று நடைபெறுகிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
சாபவிமோசனம்
சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபரதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.
குவியும் பக்தர்கள்
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுவதால் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.