வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு: பெருமாளுடன் பரமபத வாசலில் நுழைய பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ஏகாதசி நாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.
மதுரை: வைகுண்ட ஏகாதசி பெருவிழா தமிழகம் முழுவதும் வைணவ திருத்தலங்களில் நாளை மறுநாள் கொண்டாப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளுடன் கூடவே சென்று பரமபத வாசலைக் கடக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமான ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு விட்டது. எனவே ஸ்ரீரங்கம் தவிர அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் வியாழக்கிழமையன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம்
ஏகாதசி திதி நாளை 12ஆம் தேதி இரவு தொடங்கி 13ஆம் தேதி இரவு வரை இருக்கிறது. அதனால் வைகுண்ட ஏகாதசி 13ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது அதேபோல ஜனவரி 22ஆம் தேதி 2022 அன்று இராப்பத்து நாளின் 10ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு, ஜனவரி 23ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் அடைந்த நாளாக கொண்டாடப்படுகின்றது. நாளை முதலே வைகுண்ட ஏகாதசி விரதத்தை பலரும் தொடங்கி விடுவார்கள்.

மோகினி அலங்காரம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி கடந்த 4ஆம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. வருகிற 12ஆம் தேதி எம்பெருமான் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

கருட வாகனத்தில் பெருமாள்
13ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்க உள்ளது. அதன்பின் நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் காலை 6 மணிக்கு மேல் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் சொர்க்கவாசல் திறப்பு
கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 13ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. திவ்ய தேசங்களில் ஒன்றான கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வரும் 13ம் தேதி காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அப்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 6.00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் மோட்சம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications