ஆரோக்கியம் தரும் வீட்டு தோட்டங்கள் - வாஸ்து டிப்ஸ்
அதிர்ஷ்டத்தை தன் பக்கம் ஈர்த்து, வீட்டில் செல்வ வளம் பெரு உதவும் சில வாஸ்து டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன்படி ஒருவர் நடந்து கொண்டால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்
சென்னை: வாஸ்து சாஸ்திர முறைப்படி தோட்டம் அமைப்பதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் மனதுக்கு ஆனந்தம் ஏற்படுவதோடு குடும்பம் குதூகலம் அடையும். உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பல நோய்கள் மலர்கள், செடிகளால் குணமாக்கப்படுகின்றன.
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையில் உள்ள நல்ல சக்திகளை நம் பஞ்ச பூதங்களாலான நம் வீடு உட்கிரகித்து நமக்கு இயற்கையாக பெற உதவும். மனிதன் நோயற்ற வாழ்வு வாழவும், மன நிம்மதியுடன் வாழவும் வழிவகை செய்யும் ஒரு பண்டைய கட்டிடடக் கலையே வாஸ்து சாஸ்திரமாகும்.
வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கு பலர் ஆசைப்படுகிறார்கள். பலரோ வீட்டையே பசுமையாக மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டு தோட்டத்தில், வீட்டை சூழ்ந்திருக்கும் பகுதியில் வளர்க்கும் மரங்கள், செடிகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

செடி கொடிகள்
வடக்கு, கிழக்கில் சிறு செடிகளும், புதர்களும் (Bushes) இருக்கலாம். வடக்கில் மஞ்சள் வண்ணம், கிழக்கில் இளம் பிங்க் வண்ணம், தெற்கில் சிவப்பு வண்ணம், மேற்கில் நீலம், அடர் வர்ணம் கொண்ட பூக்களை கொடுக்கும் செடிகளைப் பராமரிக்கலாம். வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள செடிகள் வீட்டு ஜன்னல் அடி மட்டத்தை விட தாழ்வாக வளர விட வேண்டும். வடகிழக்கில் வீட்டை உரசியவாறு உள்ள மரம், செடி, கொடிகளால் வீட்டிலுள்ளோருக்கு எலும்பு தேய்வு, எலும்பு முறிவு, நரம்புத் தளர்ச்சி நோய்கள்.

நிழல் தரும் மரங்கள்
தோட்டத்தின் வடகிழக்கில் குப்பைகூளம், எரு போன்றவற்றைச் சேர்த்து வைக்கக்கூடாது. இவை நம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிடும். கனமான மரம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைய வேண்டும். தெற்கு, மேற்கு பகுதிகளில் வீட்டு உயரம் வரை வளரக்கூடிய மரங்களை வளர்க்கலாம். கதவுகளுக்கு நேர் எதிரில் மரங்கள் இருக்கக் கூடாது.

லாபம் தரும் செடிகள்
வீடுகளில் மந்தாரை, பவள மல்லி மரங்களை தெற்கு, மேற்கில் வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகள் கணக்கு பிசகாமல் நல்ல லாபம் ஏற்படும்; வியாபாரம் பெருகும். பவளமல்லி செடி, ராமர்பாணம் எனப்படும் ஜாதிமல்லி கொடிகளை தெற்கு, மேற்கில் அமைப்பது நல்லது.

ஆரோக்கியம் தரும் மரங்கள்
சீந்தில் கொடி வளர்க்க இது இதய சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுப்பதுடன் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும். ஆல், அரசு, புங்க மரம், வேம்பு, வில்வ மரம், புன்னை மரம், கருங்காலி, செம்மரம், சந்தன மரம், பவளமல்லி ஆகியவை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இவற்றில் ஐந்து மரங்கள் சூழ்ந்திருக்கும் கட்டிடத்தை பஞ்சவடி என்பார்கள். இவை தெற்கு, மேற்கு, வடமேற்கில் வளர்க்க அதிக நன்மைகள் கிடைக்கும். வாழை மரம், எலுமிச்சை மரம், மாதுளை மரம், கொய்யா மரங்களையும் வளர்க்க ஆரோக்கியம் பெருகும்.

மருத்துவ மூலிகை துளசி
துளசி செடியை மாடத்தில் வைத்தும் வளர்க்கலாம். மண் பரப்பிலும் துளிர்விட செய்யலாம். தொட்டிகளிலும் வளர்க்கலாம். மருத்துவ குணங்களை தன்னகத்தே பெற்ற மூலிகை செடியாக இருப்பதால் கட்டாயம் வீட்டில் துளசியை இடம்பெற செய்ய வேண்டும்.

வடகிழக்கில் கிணறு
வடகிழக்கு சார்ந்து தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தால் நீர் ஆதாரம் நீடித்து இருக்கும். கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் கிணறுகளை அமைத்தால், வற்றாத நீர்ப்பெருக்கு இருக்கும். சமையல் அறை தென்கிழக்கு அல்லது வடமேற்கு சார்ந்த பகுதியில் இருக்க வேண்டும்.
மேற்கு, தெற்கு, தென்மேற்கு பாகங்களில் படுக்கை அறை அமையும்படியாக அமைத்தால், அங்கு சென்று ஓய்வெடுக்கும்போது களைப்பு பறந்தோடி உற்சாகம் பிறக்கும். தென்மேற்கு மூலையில் குடும்பத் தலைவர்கள் படுக்கையறை மாஸ்டர் பெட்ரூம் வைக்கலாம்.

அன்பான வீடு
வீடு என்பது சுட்ட செங்கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், மரம் போன்ற வஸ்துகளால் இணைந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டும் அல்ல.
அன்பு, பாசம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, பல உயிர்களின் நேசம், பல உணர்வுகள், இறை சக்தியோடு இணைந்து இயங்கும் அற்புத ஆற்றல் வீடு என்பதாகும். வீட்டிற்குள், தோட்டத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் செடிகளை வளர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.












Click it and Unblock the Notifications