வைகையில் இறங்கிய கள்ளழகர்... தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தந்த புராணம் தெரியுமா
சாமி இன்னிக்கு எங்க இருக்குது?' என்பதே மதுரை சித்திரைத் திருவிழாவை காண வரும் மக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கும்.
மதுரை: சித்ரா பவுர்ணமி தினமான இன்று அதிகாலையில் வைகையில் இறங்கிய கள்ளழகர், வைகை ஆற்றின் கரை வழியாகவே நடந்து சென்று வண்டியூரில் போய் தங்குகிறார். மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காகவே அழகர் மலையை விட்டு இறங்கி வருகிறார் என்கிறது புராண கதை. என்னதான் அந்த கதை எப்படி சாபவிமோசனம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.
அதே போல தவளையாக மாறி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு விமோசனம் கொடுப்பதற்காகவே அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அழகரை நினைத்து தவம்
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி,அழகர் மலையில் எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் கோபக்கார துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த சுதபஸ் முனிவரோ, துர்வாசர் வந்ததைக் கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார்.
சாப விமோசனம்
உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டார். அதற்கு துர்வாசரோ, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என என்று அதற்கான வழியை சொன்னார். அதன்படி வைகைக் கரையில் தன்னை நோக்கி தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுப்பதற்காகவே அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
தங்கக் குதிரை வாகனத்தில் அழகர்
வைகையில் ஓடும் நீரில் நின்று கொண்டு தன்னை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களைக் காண ஆடி,அசைந்து வருவதைக் காண்பதே தனி அழகுதான். வைகையில் இறங்கிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார். கூடவே பக்தர்களும் அழகருடன் பயணப்படுகின்றனர்.
மண்டூக முனிவருக்கு சாபம்
வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன்பிறகு சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கு தன் வருகைக்காக தவம் செய்து கொண்டிருக்கும் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.
பக்தர்கள் பரவசம்
தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கிலேயே தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருகை தருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்வார்கள்.
மலைக்கு திரும்பும் அழகர்
அன்றிரவு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம் நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்பும் அழகர் வழி நெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவ சாந்தி அபிஷேகம் நடக்கிறது. 23ஆம் தேதி காலை கள்ளழகர் அழகர்கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருவார். அதற்கு மறுநாள் திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவுபெறுகிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை. எது எப்படியோ பத்து நாளும் அழகர் வருகையால் மதுரையே அமர்களப்படுகிறது என்னவோ உண்மை.