சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக இன்று நடை திறப்பு - பக்தர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஆன்லைனின் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் நாளை முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலத்தில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
சித்திரை மாத விஷூ பூஜைக்குப் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்ததை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் பல கட்டுப்படுகள் விதிக்கப்பட்டன. கோவில்கள், வழிபாட்டுத்தலங்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் நாளை ஆடி மாதம் பிறக்க போவதையொட்டி இன்று மாலை 5 மணி முதல் நடை திறக்கப்படுகிறது. 21ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.












Click it and Unblock the Notifications