ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணியும் ரகசியம் தெரியுமா?
சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் பெரும்பாலும் கருப்பு ஆடைகளை அணிகின்றனர். இதற்கு சுவாரஸ்ய காரணம் ஒன்று உள்ளது. அதற்கான புராண கதைகளை பார்க்கலாம்.
பட்டனம் திட்டா: அதிகாலையில் குளிர்ந்த நீரில் இரண்டு வேளைகளில் குளித்து, கருப்பு நிற ஆடைகளை அணிந்து, ஒரு வேளை உணவை உண்டு, வெறும் தரையில் உறங்கச் செய்து, காட்டிலும் மலையிலும் வெற்றுக் காலுடன் நடக்க வைத்து, சபரிமலைக்கு வந்து தன்னை தரிசிக்குமாறு விரத முறைகளை வகுத்து தந்துள்ளார் சபரிமலை ஐயப்பன். ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணியும் ரகசியம் இதுதானாம்.
பொதுவாக குறிப்பிட்ட கடவுளுக்கு என மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் அதற்கென்றே முன்னோர்கள் பின்பற்றி வந்த ஆடைகளையே அணிந்து கொண்டு விரதம் இருப்பது வழக்கம். இதில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் பெரும்பாலும் கருப்பு ஆடைகளை உடுத்துவது தான் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும் என்று சொல்வதற்கு முக்கிய காரணமே, சாஸ்தா ஐயப்பன் சனீஸ்வர பகவானுக்கு செய்து கொடுத்த சத்தியமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பனுக்கு முதன் முறையாக மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் கண்டிப்பாக கருப்பு நிற ஆடைகளைத் தான் அணிய வேண்டும் என்றும் கூறுகின்றனர். காரணம் கருப்பு நிற ஆடை தான் சபரிமலை ஐயப்பனுக்கு பிடித்தமான ஆடையாகும்.

சபரிமலை பக்தர்கள்
கருப்பு நிற ஆடை எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும் என்று சொன்னாலும், அறிவியல் ரீதியாக பார்த்தால், வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டது. அதனால் தான் குளிர்காலங்களில் ஏற்படும் அதிமான குளிரை நம் உடல் தாங்க வேண்டும் என்பதால் குளிர்காலத்தில் கருப்பு நிற ஆடைகளை அணியச் சொல்கின்றனர். அதோடு குளிர்காலத்தில் சபரிமலையில் அதிகமான குளிரும் இருக்கும் என்பதால் தான் அந்த குளிரையும் தாங்கும் என்பதால் தான் கருப்பு நிற ஆடையை அணிந்து செல்கின்றனர்.

புராண கதை
ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும் என்று சொல்வதற்கு முக்கிய காரணமே, சாஸ்தா ஐயப்பன் சனீஸ்வர பகவானுக்கு செய்து கொடுத்த சத்தியமும் ஒரு காரணம் என்று ஜோதிட ரீதியாக கருத்து சொல்லப்படுகிறது. சனீஸ்வரருக்கு பிடித்த நிறம் கருப்பு நிறமாகும். அதனால் தான் சனி கிரகத்தால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து காத்து தன்னுடைய பக்தர்களை காத்தருளவே கருப்பு நிற ஆடையை அணிவதற்கு உத்தரவிட்டிருக்கிறார் என்று பல ஆண்டுகளாக சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான புராண கதை என்னவென்பதை பார்க்கலாம்.

சனிபகவான் சொன்ன தர்மம்
ஒரு சமயம் சனீஸ்வர பகவான் பக்தர் ஒருவரை பிடிப்பதற்காக சென்றபோது, வழியில் மடக்கிய தர்மசாஸ்தாவான ஐயப்பன், என் பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள், அவருக்கு கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா என்ற சனீஸ்வர பகவானை பார்த்து கேட்டார். அதற்கு சனீஸ்வரர், எனக்கு ஏழை, பணக்காரர், கடவுள் பக்தி உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடே கிடையாது, ஏழரை சனியின் காலம் வரும் நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் பிடிப்பேன். அது தான் என்னுடைய தர்மம் என்றார் சனி பகவான்.

கர்ம வினைகளுக்கு தண்டனை
பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் எப்படி தங்களுடைய படைத்தல், அளித்தல், அழித்தல் என அவரவர் தொழிலை செய்கிறார்களோ, அதே போல் என்னுடைய வேலையை உரிய நேரத்தில் சரியாக செய்கிறேன். படைத்தல், அளித்தல், அழித்தல் தொழில் தடைபட்டால் எப்படி படைப்பு தொழிலான சிருஷ்டி நடக்காதோ, அது போலவே, மானுடர்கள் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களை தண்டிக்கிறேன். அந்த வேலையை நான் ஒழுங்காக செய்யாவிட்டால் தர்மம் எப்படி வாழும் என்று சனீஸ்வரர் கேட்டார். சனீஸ்வரரின் பதிலில் திருப்தியடைந்த ஐயப்பன், சரி இனிமேல் நீ தரும் தண்டனைகளை என்னிடம் சொல், அந்த தண்டனைகளை ஒரு மண்டல காலத்திலேயே அனுபவிக்குமாறு என்னுடைய பக்தர்களுக்கு விரத முறைகளாக நான் வகுத்து தருகிறேன் என்றார் ஐயப்பன்.

ஒரு மண்டலம் தண்டனை
அதற்கு சனீஸ்வர பகவான், ஒருவருடைய ஏழரை சனியின் காலத்தில், விதவிதமான உணவுகளையும் பழங்களையும் உண்டு மகிழ்ந்தவரை சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன். மலர்கள் தூவிய கட்டிலில் ஆடம்பரமாக உறங்கி திளைத்தவரை, கட்டாந்தரையிலும், பாறையிலும் உறங்க வைப்பேன்.என்னதான் அந்நியோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் கூட, என்னுடைய பார்வை பட்டாலே இருவரும் பிரிந்து விடுவார்கள். கட்டிக்கொள்ள ஒழுங்கான உடைகள் கிடைக்காமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல். தன்னையே நொந்துகொண்டு, கண்டுகொள்ள முடியாதபடி, உருவம் சிதைந்துபோய், அழகு குன்றி சக்தியின்றி வாடிப் போக வைப்பேன். சதா சர்வகாலமும், பன்னீரிலேயே குளித்து திளைத்தவர்கள், தண்ணீருக்கே அலைய வைப்பேன். இதையெல்லாம் நீங்கள் எப்படி ஒரு மண்டலத்திலேயே தண்டனையாக கொடுக்க முடியும் என்று கேட்டார் சனீஸ்வர பகவான்.

காடு மலை கடந்து வரும் பக்தர்கள்
அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த தர்மாசாஸ்தாவான ஐயப்ப சுவாமி, கவலைப் படாதீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அத்தனை தண்டனைகளையும் அளிப்பேன், கேளுங்கள் என்றார். மேலும், என்னுடைய பக்தர்கள் மண்டல விரத காலத்தில் மிகவும் எளிமையாக ஒரு வேளை உணவையே உண்டு திருப்தியடைவார்கள். ஆடம்பரமான கட்டிலில் உறங்காமல், வெறும் தரையிலேயே படுத்துறங்குவார்கள். தாம்பத்யத்தில் அறவே ஈடுபடாமல், கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து, ஒரு மண்டல காலத்தில் எப்போதும் என்னுடைய நாமமான சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லியே, காடு, மலைகளை கடந்து என்னை வந்து தரிசிப்பார்கள் என்று சொன்னார்.

செருப்பு இல்லாமல் நடக்க வைப்பேன்
அதோடு, உனக்கு பிடித்த நிறம் கருப்புதானே, நான் அந்த கருப்பு ஆடைகளையே என்னுடைய பக்தர்களை உடுத்து செய்து, காலணிகளை அணிய விடாமல், முடி திருத்திக்கொள்ளாமல், என்னுடைய அணிகலனான துளசி மணி மாலையை அணிந்து கொண்டு, சுக துக்கங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கச் செய்து, அனைவராலும் சுவாமி என்று அழைக்க செய்வேன்.

குளிர்ந்த நீரில் குளியல்
அதிகாலையிலும், மாலை நேரத்திலும் குளிர்ந்த நீரிலேயே என் பக்தர்களை நீராடச் செய்வேன். என் பக்தர்கள் அனைவருமே இந்த விரத முறைகளை சிரமேற்கொண்டு செய்து முடித்து என்னை வந்து தரிசிப்பார்கள். அவர்களை, நீ உன்னுடைய கொடூர பார்வையை செலுத்தாமல் மனம் கனிந்து கருணை மழை பொழிந்து அருளாசி வழங்கி வரவேண்டும் என்று கேட்டார் ஐய்யப்பன்.
Recommended Video

காக்கும் கடவுள்
தர்மாசாஸ்தா ஐயப்பன் சொன்ன விரதமுறைகளை பக்திப் பெருக்குடன் ஏற்றுக்கொண்ட சனீஸ்வர பகவான், அன்றிலிருந்து இன்றுவரையிலும், ஐயப்ப பக்தர்களிடம் தன்னுடைய கொடூர பார்வையை செலுத்தாமல் நன்மையை மட்டுமே அளித்து வருகிறார். இப்படி சனீஸ்வர பகவானின் கொடூர பார்வையிலிருந்து தன்னுடைய பக்தர்களை காப்பதற்கே, சனீஸ்வர பகவான் சொன்ன தண்டனைகளை கடுமையான விரத முறைகளாக பக்தர்களுக்கு வகுத்து கொடுத்துள்ளார் ஐயப்பன்.












Click it and Unblock the Notifications