கல்யாண வாழ்க்கை கலகலப்பாக இருக்கணுமா... வெற்றிகரமான வாழ்க்கைக்கு துணை நிற்கும் வீடுகள்
சிலருடைய வீடுகளில் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்த மண வாழ்க்கை அமைய நம்முடைய சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் அந்த வீடுகளில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் வெற்றிகரமான திருமண வாழ்க்கைய
சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஆயிரம் ஆண்டுகள் வாழையடி வாழையாக தழைத்து வளரும் மண வாழ்க்கை ஒரு சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைகிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்னம் தொடங்கி 12 ஆம் வீடான அயன ஸ்தயன ஸ்தானம் வரை உள்ள முக்கிய வீடுகளில் கிரகங்கள் அமைவதைப் பொருத்தும் கிரகங்களின் பார்வை படுவதைப் பொருத்தும் திருமண வாழ்க்கையின் வெற்றிகரமானதாக அமைகிறது. மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய எந்தெந்த வீடுகள் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
திருமணம் நடைபெறுவது இன்றைக்கு பெரிய விசயமாக உள்ளது. பெண் கிடைத்தாலும் பலவித கண்டிசன்களுடன்தான் திருமணமே நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது நட்சத்திர பொருத்தம் பார்ப்பார்கள், ஆண் பெண்ணின் தசாபுத்தி, சர்ப்பக் களத்திரதோஷம், செவ்வாய் தோஷம், இருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷ நிலைகள் என பார்த்து முடிவு செய்வார்கள். பத்து பொருத்தம் பார்த்தும் பலரது மண வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போகும். தினசரியும் சண்டை சச்சரவாக சிலரது வீடுகளில் கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்கும்.
திருமணம் நடைபெறப்போகும் ஆண் பெண் ஜாதகத்தில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காணும் பொழுது தம்பதியரின் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமையும். தம்பதியரின் சுய ஜாதகத்தில் உள்ள பாவங்களின் வலிமையையும், நடப்பு தசா புத்தி எதிர்வரும் தசாபுத்தியின் வலிமையையும் சரியாக அமைந்தால் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் அமையும் என்பது நிச்சயம்.

தம்பதியர் குண நலம்
ஜாதகத்தில் லக்கினம் எனப்படும் முதல்பாவம் வலிமையோடு இருந்தால் பாதி வெற்றி கிடைத்து விடும். கணவன் மனைவியின் குண நலன்கள், உடல் நலன்களையும், மன நலத்தையும் ஆயுளையும் குறிப்பது லக்கினம். அந்த முதல் பாவம் வலிமையாக இருந்தால் கணவன் மனைவி மனமொத்த தம்பதியர் ஆக இருப்பார்கள். எந்த ஒரு செயலுக்கும் துவக்கம் சரியாக இருந்தால் பாதி வெற்றி கிடைத்து விடும். லக்னம் சரியாக இருந்தால் தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துவார்கள்.

மகிழ்ச்சியான குடும்பம்
நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் சுய ஜாதகத்தில் 2ஆம் வீடு எனப்படும் குடும்ப ஸ்தானம் வலிமையாக இருக்க வேண்டும். குடும்ப ஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் பேச்சில் இனிமையை தரும். கணவன் மனைவி இடையேயான அன்பை அதிகரிக்கும். இரண்டாம் இடம் வாக்கு, தன ஸ்தானம் என்பதால் கணவன் மனைவி இடையே பேச்சினால் அன்பு அதிகரிக்கும் பொருளாதார வளமும் கூடும்.
பெரும்பாலான குடும்ப பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவது தம்பதியரின் பேச்சும், அவர்களின் பொருளாதார நிலையுமே காரணம் எனவே தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் இந்த இரண்டாம் பாவகம் மிகவும் வலிமையுடன் அமைந்தாலே வெற்றிகரமான மண வாழ்க்கை அமையும்.

குல தெய்வ அருள்
நாம் செய்த புண்ணியங்கள் நமக்கு நல்ல வாழ்க்கைத்துணை கொடுக்கும். நல்ல பிள்ளைகள் அந்த பிள்ளைகளால் சந்தோஷத்தைக் கொடுக்கும். பூர்வ புண்ணியம் எனப்படும் 5ஆம் பாவகம் வலிமையோடும் அந்த இடத்தில் பாவ கிரகங்கள் எதுவும் அமராமல் பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் குலம் தழைக்கும் நல்ல புத்திரர்கள் அந்த ஜாதகருக்கு கிடைப்பார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி வலிமையாக சஞ்சரித்தாலும் எந்த சிரமமான சூழ்நிலையையும் ஜஸ்ட் லைக் தட் என கையாண்டு வெற்றி பெறுவார். இதனால் மண வாழ்க்கையில் பிரச்சினை வர வாய்ப்பு இல்லை. பிள்ளைகளால் பெருமையும் சிறப்பும் பெற்றோர்களுக்கு ஏற்படும். பலரது உதவியும் கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை
திருமணமான தம்பதியர் சிலர் மணமான நாளில் இருந்தே வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பரஸ்பரம் புரிதல் அன்பு எதுவும் இருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமையும் நெருக்கமும் பிரியமும் ஏற்பட களத்திர ஸ்தானம் வலுவாக இருக்க வேண்டும். தம்பதியர் இடையே காதல் அதிகரிக்க காரணமாக இருப்பது ஏழாம் வீடு எனப்படும் களத்திர ஸ்தானம்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் பிரிவு நிலையை தராமல், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வதற்கும் ,ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியான மண வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும் களத்திர பாவகம் வலிமையே அடிப்படையாக அமையும்.

எட்டாம் வீடு எப்படி இருக்கு
தம்பதியரின் சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான 8ஆம் பாவகம் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் ஆயுள் வலிமையை குறிக்கும். எட்டாம் இடம் களத்திர ஸ்தானத்திற்கு இரண்டாம் இடமாகவும் அமைவதால் வாழ்க்கைத்துணையின் வழியில் பொருள் வருவாய் வருவதைக் குறிக்கும். ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் அமையும் பொழுது கணவனுக்கு மனைவியாலும்,மனைவிக்கு கணவனாலும் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல வாழ்க்கை துணையை எப்படி நடத்துவார் என்பதையும் இந்த எட்டாம் வீட்டை வைத்து முடிவு செய்யலாம்.

இன்பமான வாழ்க்கை
எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்க்கையின் சந்தோஷத்தை கூறுவது 12வது வீடு எனப்படும் அயன ஸ்தயன ஸ்தானமாகும். 12ஆம் வீடு வலிமை பெறுவது தம்பதியரின் அந்தர வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், பரஸ்பர தாம்பத்திய இன்பங்களையும் கொடுக்கக் கூடிய இடமாகும். 12ஆம் இடம் வலிமையாக இருந்தால் திடீர் அதிர்ஷ்டமும் அதன் மூலம் பொருள் வரவும் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் யோகத்தை தரும். எனவே திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இந்த வீடுகளில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்து மண வாழ்க்கையை முடிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications