ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்!

Subscribe to Oneindia Tamil

ISI Headquarters
-ஏ.கே.கான்

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே அமைதி முயற்சிகள் தொடங்கும்போதெல்லாம் அதை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தே இந்தியாவை நிலைகுலையச் செய்யும் ஐ.எஸ்.ஐயின் முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டன. எல்லை தாண்டி வந்து தாக்குவது, காஷ்மீர் விவகாரத்தை வைத்து ஐ.நாவில் பிரச்சனை செய்வது என ஆரம்பித்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.-ராணுவம் சார்ந்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை எட்டியது 1980களில் தான்.

நேரடியாக இந்தியாவுடன் நடத்திய போர்களில் தோல்வியையே தழுவிய அந்த தேசம் கையில் எடுத்த ஆயுதம் தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் தருவதோடு அவர்களை தனது நாட்டுக்குள்ளேயே அழைத்துச் சென்று பயிற்சியும் தந்து அனுப்ப ஆரம்பித்தது பாகிஸ்தான்.

ஆனால், இதையெல்லாம் தாண்டியும் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவைப் பேணும் முயற்சிகளில் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் ஈடுபட்டே வந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் அமைதி முயற்சிகளில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டாலும் ஐ.எஸ்.ஐ. நுழைந்து அதைக் கெடுப்பதும் வழக்கமாகிவிட்டது.

இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடக்கப் போகிறது என்றால் இந்தியாவில் எங்காவது குண்டு வெடிப்பை நடத்தும் ஐ.எஸ்.ஐ. அதே போல இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால், எல்லையில் ஏதாவது பெரிய அளவில் தாக்குதல் நடக்கும்.

இதன்மூலம் பாகிஸ்தான் அரசிடம் ராணுவத்தின் கட்டுப்பாடு இல்லை என்பதும், அதை இயக்குவது ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு தான் என்பதும் பல முறை நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவைப் பேண விரும்பி, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை பாகிஸ்தானுக்கு அழைத்தார். வாஜ்பாயும் லாகூருக்கு பஸ்சிலேயே சென்றார். இந்தப் பயணத்தின் மூலம் இரு தரப்பக்கும் இடையே கொஞ்சம் ஒற்றுமை தழைத்த நிலையில் தான், 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் தனது படைகளை அனுப்பி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது பாகிஸ்தான் ராணுவம்.

இதையடுத்து நடந்த போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம். இந்தியா தனது பகுதியை மீட்டுவிட்டாலும், அந்தப் போர் இரு நாடுகளிடையிலான தூரத்தை மேலும் அதிகரித்தது. இரு நாட்டு சமூகங்கள் இடையே பரஸ்பர எதிர்ப்புணர்வை மேலும் கூராக்கியது. இதைத் தான் ஐ.எஸ்.ஐயும் விரும்பியது.

கார்கில் போர் நடந்த அதே ஆண்டில் தான் ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் கடத்திச் சென்றதும், இந்தியப் பயணியைக் கொன்றதும், மற்ற பயணிகளை ஒரு மாதத்துக்கும் மேல் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததும் நடந்தது.

இதன் பிறகு பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரபை பிரதமர் வாஜ்பாய் பேச்சுவார்த்தைகளுக்காக ஆக்ராவுக்கு அழைக்க, அவரும் வந்தார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்து முஷாரப் ஊருக்குப் போன அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தினர் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.

இதற்கெல்லாம் உச்சமாக கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கோரதாண்டவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

இந் நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மெந்தார் செக்டருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 13வது ராஜ்புத் ரைபில்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்களைக் கொன்றுள்ளனர். இதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுவும் கூட சமீபகாலமாக இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் கொஞ்சம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இதன் பின்னணியில் நிச்சயம் ஐ.எஸ்.ஐயும் பாகிஸ்தான் ராணுவமும் இருக்கவே செய்யும் என்றும் நம்ப்படுகிறது.

அந்த நாட்டில் அமையும் அரசுகள் எல்லாமே பொம்மை அரசாங்கங்களாக, ஐ.எஸ்.எஸ்-ராணுவத்தின் கைப்பாவைகளாக இருக்கும் வரை இது போன்ற செயல்கள் தொடரத்தான் போகின்றன. இதைத் தடுக்க இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுப்பதே சரியான தீர்வாக இருக்குமே தவிர, அந் நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பி கூப்பிட்டு எச்சரிப்பதால் ஏதும் நடக்கப் போவதில்லை.

தன்னைத் தாக்கினால் கடுமையாகத் திருப்பித் தாக்கும் அமெரிக்கா ஸ்டைல் பதிலடிகள் தான் இது போன்ற செயல்களில் இருந்து பாகிஸ்தானைத் தடுக்கும். ஆனால், அதற்கு நம்மிடம் நிறைய 'அரசியல் தைரியம்' வேண்டும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+