குஜராத் பால விபத்து.. பராமரிப்பு பணிகளை செய்தவரை சீக்ரெட்டாக சந்தித்த மோடி? காங். சொல்வது பொய்
காந்திநகர்: குஜராத் மோர்பி பால விபத்தில் 130 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக இணையத்தில் பல தகவல்கள் பரவ தொடங்கி உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் மோர்பி என்ற பகுதியில் 1879ஆம் ஆண்டு தொங்கு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குவியும் ஒரு இடமாகவே இருந்து உள்ளது.
இத்தனை ஆண்டுகள் இந்த தொங்கு பாலத்தைப் பயன்படுத்தி, நதி கடந்து வந்தனர். இதனிடையே பராமரிப்பு பணிகளுக்காக இந்த பாலம் இந்தாண்டு தொடக்கத்தில் மூடப்பட்டன.
மோர்பி பாலம் விழுந்தது கடவுளின் விருப்பம்.. நீதிமன்றத்தில் கூறிய நிறுவன மேனேஜர்.. என்ன ஒரு ஆணவம்
குஜராத் பால விபத்து
சுமார் 7 மாதங்களாகப் பராமரிப்பு பணிகளுக்குப் பின் இந்த பாலம் கடந்த அக். 25ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பாலத்தில் அதிகப்படியான மக்கள் இருந்தனர். அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 130 பேர் இந்த விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.
அதிக எடை
குஜராத் அரசு இந்த விபத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது. மத்திய மாநில அரசுகள் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை அறிவித்து உள்ளது. அதிகபட்சமாக 125 பேரின் எடையை இந்த பாலம் தாங்க முடியும் என்ற நிலையில் 400 பேரைப் பாலத்தில் அனுமதித்து உள்ளனர். இதுவே விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
பரவும் படம்
கடந்த செவ்வாய்க்கிழமை விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, காயமடைந்தோரையும் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவருடன் இருப்பதாகக் கூறி ஒரு படம் இணையத்தில் வேகமாகப் பரவ தொடங்கியது.
குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் படத்தில் மோடியுடன் இருப்பவர் தான் இந்த பாலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கான்டிராக்ட் எடுத்தவர் என்று பதிவிட்டு உள்ளனர். "மோர்பி பாலத்தின் பராமரிப்பு பணிகளின் ஒப்பந்தம் பெற்றவரும் மோடியின் கூட்டாளிதான்... தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை தருவோருக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. இப்போது 40% கேட்கிறார்களாம். இது கிரிமினல் குற்றம்" என்று பதிவிட்டு உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள்
இதை ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். அதேநேரம் இந்தப் படம் உண்மை தானா என்பது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதை நாம் ஆய்வு செய்ததில் இது கடந்த 2021 அக். 14ஆம் தேதி எடுக்கப்பட்ட ஃபோட்டோ என்று தெரிய வருகிறது. மேலும் படத்தில் இருப்பவர் பால பராமரிப்பு கான்டிராக்ட் எடுத்த ஓதவ்ஜி ராகவ்ஜி படேல் என்றும் கூறி வருகின்றனர்.
உண்மை என்ன
அதுவும் பொய் என்பது நமது ஆய்வில் தெரிய வந்து உள்ளது. இந்த படத்தில் இருப்பவர் உலகின் மிகப்பெரிய கடிகார உற்பத்தி நிறுவனமான அஜந்தா குழுமத்தை நிறுவியவர் ஓதவ்ஜி ராகவ்ஜி படேல் இல்லை. அவர் கடந்த அவர் 2012ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டார். படத்தில் இருப்பது குஜராத் விவசாய துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் ஆவார். இந்த படத்தை அவரும் கடந்தாண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதும் தெரிய வருகிறது.
Fact Check
வெளியான செய்தி
மோர்பி பாலத்தைப் பராமரிக்க ஒப்பந்தம் போட்ட நிறுவனத்தின் உரிமையாளருடன் பிரதமர் மோடி உள்ளதாக ஃபோட்டோ பரவுகிறது.
முடிவு
அந்த படத்தில் உள்ளவர் குஜராத் விவசாய துறை அமைச்சர் ராகவ்ஜி படேல். எனவே இது பொய்யான தகவல்