Fact Check - குடியரசு தினத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதா? பீகார் வீட்டு மாடியில் பறந்தது என்ன?
பீகாரில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது பாகிஸ்தான் கொடிதானா? என்பது பற்றிய உண்மை தகவலை அலசுவோம்
டெல்லி: பீகார் மாநிலம் புர்னியாவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் குடியரசு தினத்தன்று பாகிஸ்தான் நாட்டின் கொடி ஏற்றப்பட்டதாகவும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் உரிமையாளரை கைது செய்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வீட்டின் மாடியில் ஏற்றப்பட்டது பாகிஸ்தான் கொடிதானா? என்பது பற்றிய உண்மை தகவலை அலசுவோம்.
இந்தியாவின் 74 வது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பீகாரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பாகிஸ்தான் கொடி பறப்பதை போன்ற அந்த வீடியோ முதலில் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகின.
Fact Check என்னாது! ஊழியர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து வைத்தாரா?
செய்தி நிறுவனம் ட்வீட்
இதனை தொடர்ந்து அந்த வீடியோ மற்றும் செய்தியை பிரபல தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், பீகார் மாநிலம் புர்னியாவில் உள்ள மதுபானி சிபாஹி டோலா பகுதியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு உள்ளது. கொடி ஏற்றப்பட்ட வீட்டிற்கு சென்று அதை அகற்றி இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளதாக அந்த செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.
தொலைக்காட்சிகளின் பிரேக்கிங் செய்திகள்
இதனை தொடர்ந்து அந்த வீடியோவையும், செய்தியையும் ஏராளமான முன்னணி ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பிரேக்கிங் செய்திகளாக வெளியிட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் வலுத்தன.
பாகிஸ்தான் கொடியா?
இந்த நிலையில் வீடியோவில் காட்டப்பட்ட கொடியை தெளிவாக உற்று நோக்கினால் அது பாகிஸ்தான் கொடி இல்லை என்பது தெளிவாகிறது. முன்னணி உண்மை சரிபார்ப்பு தளங்களும் இதை உறுதிபடுத்தி உள்ளன. இதற்கிடையே பீகார் மாநில காவல்துறையும் புர்னியாவில் ஏற்றப்பட்டது பாகிஸ்தான் கொடி இல்லை என்பதை உறுதிபடுத்து இருக்கிறது.
உண்மை என்ன?
ஆம், பாகிஸ்தான் கொடியில் சிறிதளவு வெள்ளை பகுதியும், பெரிய அளவிலான பச்சை பகுதியின் மத்தியில் வெள்ளை நிற பிறை மற்றும் நட்சத்திரமும் இருக்கும். ஆனால், பீகாரில் முஹம்மது முபாரகுத்தீன் என்பவரது வீட்டில் ஏற்றப்பட்ட கொடிக்கும் பாகிஸ்தான் கொடிக்கும் வித்தியாசம் இருந்ததை பார்க்க முடிந்தது.
பீகார் போலீஸ் விளக்கம்
அந்த கொடியில் பாகிஸ்தான் கொடியை போன்று பச்சை நிறத்துக்கு மத்தியில் பிறையும் நட்சத்திரமும் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் கொடியில் இருக்கும் வெள்ளை பகுதிக்கு பதில், வெள்ளை கருப்பு நிற ஜிக்ஜாக் வடிவமும், நீள நிற வடிவமைப்பும் இருந்தது. அது என்ன கொடி என்று விசாரித்தபோது ஒரு இஸ்லாமிய அமைப்பின் கொடி என்பது தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி சுரேந்திர குமார் சரோஜ் கூறி இருக்கிறார்.
இஸ்லாமிய அமைப்பின் கொடி
தாவத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பின் கொடி இது என்பது தெரியவந்து இருக்கிறது. அந்த கொடியில் உள்ள நீள வடிவம் என்பது பாக்தாத் ஷரீப் மசூதியில் டோமில் உள்ள வடிவமைப்பாகும். அதேபோல் கருப்பு வெள்ளை நிற ஜிக்ஜாக் வடிவம் பரேலி ஷரீப் தர்காவின் டோமில் உள்ள வடிவமைப்பாகும். மீலாது நபி போன்ற காலக்கட்டத்தில் இந்த கொடியை பல டெல்லி, மும்பை, அகமதாபாத், வாரணாசி, பீகார் போன்ற பல பகுதிகளில் ஏற்றுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
முஸ்லிம் லீக் கொடி
இதற்கும் முன்பும் இதே கொடியை ஏற்றியதற்காகவும், விற்பனை செய்தற்காகவும் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியும் பச்சை நிறத்தில் பிறை, நட்சத்திரத்துடன் இருப்பதை அதையும் பாகிஸ்தான் கொடி என்று தவறாக புரிந்துகொண்ட நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.
Fact Check
வெளியான செய்தி
பீகார் மாநிலம் புர்னியாவில் குடியரசு தினத்தன்று ஒரு வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை
முடிவு
வீட்டில் ஏற்றப்பட்டது பாகிஸ்தான் கொடி அல்ல. தாவத் இ இஸ்லாமி என்ற அமைப்பின் கொடி என போலீஸ் விளக்கம்