குஜராத்: பாலத்தை மக்கள் வேகமாக ஆட்டியது விபத்திற்கு காரணமென பரவும் தகவல் பொய்! உண்மை என்ன தெரியுமா?
காந்திநகர்: மோர்பி பாலம் விபத்து நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் பரவி வருகின்றன.
குஜராத் மோர்பி நகர்ப் பகுதியில் மச்சு என்று நதி ஒன்று ஓடுகிறது. இந்த நதியை எளிதாகக் கடக்கும் வகையில் தொங்கு பாலம் என்று அங்கு உள்ளது.
இந்த பாலம் புதிதாக இப்போது கட்டப்பட்ட பாலம் எல்லாம் இல்லை. பிரிட்டிஷ் நம்மை ஆட்சி செய்த காலத்தில் 1879இல் இந்த பாலத்தை அவர்கள் கட்டினர்.
குஜராத் பாலம்
இத்தனை ஆண்டுகளாக இந்த பாலத்தை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தியே வந்தனர். இதற்கிடையே இந்த பாலத்தைப் புனரமைக்க இந்தாண்டு தொடக்கத்தில் இந்த பாலம் மூடப்பட்டது. சுமார் ஆறு மாதங்களாகப் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த அக். 26ஆம் தேதி தான் குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டு இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
கேபிள் அறுந்து விபத்து
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இந்த பாலத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்தனர். பாலம் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்பு திறக்கப்பட்டதால் இதைக் காண மக்கள் பலர் ஆர்வமாக அங்கு வந்து இருந்தனர். இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மோர்பி பாலத்தின் கேபிள் திடீரென அறுந்து மோசமான விபத்து ஏற்பட்டது. இதனால் பாலத்தில் இருந்தவர்கள் அப்படியே ஆற்றில் விழுந்தனர்.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இந்த மோசமான விபத்தில் இப்போது வரை குறைந்தது 141 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் விடிய விடியத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசியப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை என அனைத்தும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பொறுப்பு
விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஆற்றின் கரையோரம் இருந்தவர்களும் நீச்சல் தெரிந்தவர்களும் அங்கிருந்து எளிதாகத் தப்பி வந்துவிட்டனர். ஆனால், நீச்சல் தெரியாதவர்கள் கடும் குளிரில் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்திற்குக் குஜராத் அரசு முழு பொறுப்பு ஏற்பதாக அறிவித்து உள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் காயமடைந்தோருக்கும் மத்திய மாநில அரசுகள் நிதியுதவியும் அளித்து உள்ளது.
வீடியோ
இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக சில வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. விபத்து நடக்கும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறி அந்த வீடியோக்கள் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், பிரபல ஆங்கில ஊடகங்கள் கூட அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தனர். ஒரு ஆங்கில ஊடகம் அது விபத்து நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்றும் மற்றொரு ஊடகம் அதற்கு முதல்நாள் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் செய்தி வெளியிட்டு உள்ளன.
உண்மை என்ன
இளைஞர்கள் சிலர் தொங்கு பாலத்தை வேண்டுமென்றே ஆட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்று உள்ளது. இருப்பினும், இந்த வீடியோ குறித்து சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளன. இதை நாம் செக் செய்து பார்க்கையில் அது புதிய வீடியோ இல்லை என்பது தெரிகிறது. பழைய வீடியோவை விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
பழைய வீடியோ
இன்னும் சொல்லப்போனால், ஒரு யூடியூப் சேனலில் 10 மாதங்களுக்கு முன்பு, அதாவது பாலம் புனரமைப்பிற்காக மூடும் முன்பே, அதே வீடியோவை பகிர்ந்து உள்ளனர். அவ்வளவு பழைய வீடியோவை விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் விபத்து தொடர்பாகப் பரவும் வீடியோ பொய்யானது என்பது உறுதியாகிறது.
Fact Check
வெளியான செய்தி
குஜராத்தில் இளைஞர்கள் சிலர் பாலத்தை வேகமாக ஆட்டியதே விபத்திற்குக் காரணம் என்று வீடியோ ஒன்று பரவுகிறது.
முடிவு
அது இப்போது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை. பாலத்தைப் புனரமைக்கும் முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ!