Fact check: சரத்துக்கு பதிலாக ஆளுநர் முகம்.. போட்டோஷாப்! ஆன்லைன் ரம்மி விளம்பரம் - உண்மை என்ன?
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மிக்கு விளம்பரம் செய்வது போன்று விளம்பர புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழப்பதால், பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இளைஞர்களின் பணத்தையும் உயிரையும் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்றியது தமிழக அரசு.
இதற்கிடையே, நிரந்தர சட்டம் இயற்ற மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
ஆன்லைன் ரம்மியில் பணம் கொள்ளை.. ஆளுநரை சந்தித்த அமைச்சர் ரகுபதி விளக்கம்..உயிர்கள் காப்பாற்றப்படுமா?
ஆன்லைன் சூதாட்ட அபாயம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்கள் நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் அடிமையாக்கியுள்ளன. சாதாரண மக்கள் முதல் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இலக்காகி, தங்கள் பணத்தையும், வாழ்வையும் பறிகொடுத்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, நிம்மதியை இழந்து, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்கள் ஏராளம். தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தடை பெற்ற கம்பெனிகள்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்பலி ஏற்படுவதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான அவசர சட்ட மசோதா கடந்த 2020 நவம்பரில் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றன.
அவசர சட்டம்
பின்னர், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த ஜூன் மாதம் ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு குழுவின் பரிந்துரைப்படி, ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்ட மசோதா தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரது ஒப்புதலையும் பெற்று அவசர சட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு.
அவசர சட்டம் காலாவதி
அதன் பிறகு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கான மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச்சட்டம் நவம்பர் 27ஆம் தேதியோடு காலாவதியானது. சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும் என்பது விதி.
ஒப்புதல் அளிக்காத ஆளுநர்
அவசர சட்டம் காலாவதி ஆவதற்குள், நிரந்தர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த மசோதாவில் சில சந்தேகங்களை எழுப்பி அரசியம் விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிப்பது குறித்த அதிகாரம், அளவீடு குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார். தமிழ்நாடு அரசின் சட்டத்துறையும் உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. எனினும், இன்னும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
கடும் கண்டனம்
ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ளதால், மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீத சம்பவங்கள் நடைபெறும் அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் தான், ஆளுநர், ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவாக ஆளுநர்?
ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையிலும், தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வது போல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. "ரம்மி ரவி விளையாடிக் கொண்டிருக்கிறது ஜங்க்ளீ ரம்மி" என்றும், "பொறுப்புடன் விளையாடு" என்று ஆளுநர் ரவியின் புகைப்படங்களுடனுடன் ரம்மி விளம்பரங்கள் போன்ற படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
விளம்பரத்தில் ஆளுநர்?
இந்த படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பலரும் பகிர்ந்து உண்மையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவினர், பொதுமக்கள் என பலரும் இந்தப் படத்தைப் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்தப் படங்கள் முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை எனத் தெரிய வருகிறது. ஜங்க்லீ ரம்மி, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் விளம்பர படங்களில் ஆளுநர் ரவியின் முகத்தை இணைத்து போலியாக பரப்பப்பட்டு வருவது தெளிவாகிறது.
Fact Check
வெளியான செய்தி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மிக்கு விளம்பரம் செய்வது போன்று விளம்பர புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
முடிவு
ஆளுநர் ரவி, ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் இடம்பெறுவது போல பரவி வரும் படங்கள் பொய்யானது. ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் ஆளுநர் ரவியின் முகத்தை வைத்து பொய்யாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.