FACT CHECK: பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய நியூஸ் கார்ட் போலி!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்றும் கேடி ராகவனை போன்றே தன்னையும் சதி செய்து வெளியேற்றி உள்ளனர் எனவும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார் என ஒரு முன்னணி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாக ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா சிவா ஆகியோரது நடவடிக்கையால் நேற்று மாநில நிர்வாகத்திற்குள் இருந்து வந்த பூஷல் அம்பலமாகி உள்ளது.
பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவரான சூர்யா சிவா மற்றும் பாஜகவின் சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சிக்கும் இடையிலான செல்போன் உரையாடலே தற்போது மொத்த பிரச்சனைக்கு காரணமாக அமைந்து இருக்கிறது.
அப்படியா..தெரியாதே..நன்றி..இளைஞரணி செயலாளர் பதவி பெரிய பொறுப்பு..உதயநிதி ஸ்டாலின் ரியாக்சன்
சூர்யா சிவா ஆடியோ
பாஜகவில் பொறுப்பாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் சூர்யா சிவாவிற்கும் டெய்ஸிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டெய்சியை செல்போனில் தொடர்புகொண்ட சூர்யா சிவா, தகாத கொச்சை வார்த்தைகளை கொண்டு அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது.
காயத்ரி ரகுராம்
தனியார் ஊடகம் ஒன்றில் இந்த ஆடியோ வெளியானாலும், அது அதிகம் பிரபலம் அடைய காரணமாக இருந்தவர் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம். இந்த அந்த ஆடியோ ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்த அவர், சூர்யா சிவாவை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.
கடும் விமர்சனம்
"பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை.
டெய்சிக்கு ஆதரவு
களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அண்ணாமலை நடவடிக்கை
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, "தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று கூறினார்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் அண்ணாமலையை வெளிப்படையாக விமர்சித்து கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம் பாஜக தேசிய தலைமையை சந்திக்க உள்ளதாக கூறி இருக்கிறார். அவர் என்னை ஏதாவது ஒரு நாள் வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார் என பெயர் குறிப்பிடாமல் ஒரு பதிவையும் காயத்ரி ரகுராம் வெளியிட்டு இருந்தார்.
பரவும் பதிவு
இந்த நிலையில் "பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை" என்ற தலைப்பின் கீழ் பிரபல தனியார் தொலைக்காட்சியின் சமூக வலைதள செய்தி கார்டின் வடிவமைப்பில் காயத்ரி ரகுராம் பேசியதாக ஒரு படம் வெளியாகி இருக்கிறது. பலரும் இந்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கேடி ராகவனுக்கு எதிராக சதியா?
அதில், "பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த தவறும் செய்யாத ராகவனைப் போலவே என்னையும் திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர். தேச பக்தி கொண்ட பிராமணர்களால் மட்டும் தான் பாஜகவிற்கு வாக்களிக்கவும் - உழைக்கவும் முடியும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஊடக செய்தி உண்மையா?
சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்திலும் இதுபோன்ற படம் வெளியிடப்படவில்லை. மேலும் பகிரப்படும் படத்தில் இருக்கும் தமிழ் எழுத்தின் (FONT) வடிவமைப்பை அந்த ஊடகம் தற்போது சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதே இல்லை என்பதையும் அறிந்துகொண்டோம்.
காயத்ரி ரகுராம் பேசினாரா?
காயத்ரி ரகுராம் இவ்வாறு பேசி இருக்கிறாரா என்ற உண்மை தன்மையை ஆராய நேற்று அவர் அளித்த பேட்டி, ட்விட்டர் பதிவுகளை ஆராய்ந்தபோது இதுபோன்ற கருத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது தெளிவானது. இந்த நிலையில் காய்த்ரி ரகுராமே, "இது தவறான பதிவு. இதை நான் கண்டிக்கிறேன்." என பதிவிட்டு விளக்கி உள்ளார்.
வெளியான செய்தி: "பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை. பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார்." என காயத்ரி ரகுராம் பேட்டி என தனியார் தொலைக்காட்சி பெயரில் செய்தி
Fact Check
வெளியான செய்தி
“பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை. பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார்.” என காயத்ரி ரகுராம் பேட்டி என தனியார் தொலைக்காட்சி பெயரில் செய்தி
முடிவு
இதுபோன்ற செய்தி அந்த ஊடகத்தில் வெளியிடப்படவில்லை. காயத்ரி ரகுராமும் இதை ட்விட்டரில் மறுத்துள்ளார்.