தேற்றான்கொட்டை.. நோஞ்சானை பலசாலியாக்கும் "இதய நண்பன்".. தேற்றான் கொட்டை பழங்கள் போதுமே.. ஆச்சரியம்
சென்னை: உடல் பலம் குன்றியிருப்பவர்களை தேற்றும் மூலிகைதான் தேற்றான்கொட்டை.. ஆனால், இந்த தேற்றான் பழங்களிலுள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? என்னென்ன கோளாறுகளை இப்பழங்கள் சரிசெய்கின்றன தெரியுமா?
தேற்றான் மரத்திலிருந்து பெறப்படுவதே தேற்றான் கொட்டை... கடினமாக இருக்கும் இந்த கொட்டையை, இடித்து, உடைத்து, ஊறவைத்து அதற்கு பிறகுதான் பயன்படுத்த முடியும்.. சித்த மருத்துவத்தில் இந்த தேற்றான்கொட்டைகளுக்கு இன்றுவரை தனி முக்கியத்துவம் உள்ளது.. கிராமப்புறங்களில் இன்னமும் இந்த தேற்றான்கொட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.

ஊருணிகள்: குறிப்பாக, குடிநீர் ஆதாரங்களாக விளங்கக்கூடிய குளம், குட்டை, ஊருணிகள் போன்றவற்றில், கலங்கின தண்ணீரை தெளியவைக்கவே, இந்த தேற்றான்கொட்டையை போட்டுவிடுவார்கள். சேறும் சகதியுமான நீரில், இந்த கொட்டையை இடித்து போட்டுவிட்டால், அந்த நீர் தெளிந்து சுத்தமாகிவிடும்.
அல்லது இந்த தேற்றான்கொட்டையை பானைகளில் தேய்த்து, அதில் தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டாலும், சிறிது நேரத்தில், கலங்கிய நீர் தெளிந்துவிடும்.. அழுக்குகள், கிருமிகள் நீங்கி சுத்தமான குடிநீர் கிடைத்துவிடும். 10 லிட்டர் தண்ணீரில் 2 தேற்றான்கொட்டைகளை 2 மணி நேரம் போட்டுவிட்டாலே போதும்.. நாட்டு மருந்து கடைகளில் தேற்றான் கொட்டைகள் கிடைக்கின்றன.. தேற்றான் கொட்டை பவுடர்களும் கிடைக்கின்றன.
கஷாயம்: உடல் நலம் குன்றியவர்கள், மெல்லிய உடல்வாகுடன் பலமின்றி இருப்பவர்களுக்கு, ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த இந்த தேற்றான்கொட்டை பவுடர் அருமருந்தாகும்.. இதில் கஷாயம் போல வைத்து குடித்தால் உடல் தேறிவிடும்.. உடலிலுள்ள உஷ்ணமும் அகலும்.. சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பார்வை, கண் நரம்பு பிரச்சனை இருந்தால் இந்த பொடியை கஷாயம் வைத்து குடித்தாலும், நரம்பு மண்டலம் சீராகும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனம் அடைந்துவிட நேரும்.. இதுபோன்ற தொந்தரவு இருந்தால், தேற்றான்கொட்டை சூரணத்தில் டீ போல தயாரித்து, பால் சேர்த்து குடித்து வரலாம். அதேபோல, பால்வினை நோயால் ஏற்படும் புண்களையும் ஆற்றக்கூடிய சக்தி இந்த தேற்றான்கொட்டை சூரணத்துக்கு உள்ளது..
கொழுப்பு : கொழுப்பை கரைக்கும் தன்மையும் இந்த சூரணத்துக்கு உள்ளது.. முக்கியமாக, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கிறது இதனால் ரத்த ஓட்டமும் சீராவதுடன், உள் உறுப்புகளிலுள்ள அழற்சிகளும் நீங்கிவிடும்..
தேற்றான்கொட்டையை தவிர, தேற்றான் பழங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. கிட்டத்தட்ட நாவல் பழம் போலவே இந்த பழங்களும் காணப்படும்.. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கொட்டையிலிருந்து லேகியம் தயாரிப்பார்கள்.. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
கண் நோய்கள்: தேற்றான் விதைகளை போலவே, இந்த பழங்களும் சளியை விரட்டக்கூடியது.. கபத்தை போக்கக்கூடியது.. வயிற்று கோளாறுகளை சரி செய்யக்கூடியது.. வயிறு புண்களையும், காயங்களையும் ஆற்றக்கூடியது. முக்கியமாக கண் நோய்களை போக்கும் தன்மை இந்த பழங்களுக்கு உள்ளது.. சிறுநீரக கோளாறுகளையும் இந்த தேற்றான் பழங்கள் குணமாக்குகின்றன..
இப்படி பல அதிசயங்களை செய்யும் இந்த தேற்றான்கொட்டைகளை, பழங்களை, சூரணத்தை, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்தாக உட்கொள்ளும்போது பலன் பலமடங்காகும்.. ஆரோக்கியமும் தழைக்கும்.












Click it and Unblock the Notifications