இளைஞர்களிடையே அதிகரிக்கும் இதய செயலிழப்பு.. என்ன காரணம்? இதை தடுப்பது எப்படி! மருத்துவர்கள் விளக்கம்
டெல்லி: நமது நாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவர் உயிரிழப்பது, நல்லா உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தவர் உயிரிழப்பது என திடீர் திடீரென இளைஞர்கள் சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏன் இதுபோல ஏற்படுகிறது.. இதற்கு என்ன காரணம்.. இதை எப்படித் தடுக்கலாம் என்பது குறித்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது நல்ல உடல்நிலையில் உள்ள இளைஞர்கள் கூட திடீரென சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பான பல வீடியோக்களை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

இளைஞர்கள், அதுவும் ஃபிட்டாக இருக்கும் இளைஞர்களுக்கும் இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் நடக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
மாரடைப்பு & இதய செயலிழப்பு:
முதலில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது மாரடைப்பு (heart attack) என்பது வேறு.. இதய செயலிழப்பு (sudden cardiac arrest) என்பது வேறாகும். மாரடைப்பு என்பது தமனிகளில் அடைப்பு மற்றும் உறைதல் ஆகியவை காரணமாக ஏற்படுகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மறுபுறம் இதய செயலிழப்பு என்பது முற்றிலும் வேறானது. இது இதயத்தின் எலக்டிரிக் இம்பள்ஸ் (electrical impulses)தடைப்படுவதால் ஏற்படுகிறது. அதேநேரம் முதலில் மாரடைப்பு ஏற்பட்டு, அது இதயத்தின் எலக்டிரிக் இம்பள்ஸை பாதித்தால், அதனால் கூட இதய செயலிழப்பு ஏற்படலாம். பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது அதை ஈசிஜி அதாவது எலக்ட்ரோ கார்டியோகிராமில் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். ஆனால், திடீர் மாரடைப்பு ஏற்படும் போது அதைக் கண்டுபிடிக்க நேரம் இருக்காது. சில நொடிகளில் நோயாளி இறந்துவிடுவார். நாம் பல வீடியோக்களில் அதைத்தான் பார்த்து இருப்போம்.
என்ன காரணங்கள்:
சரி, முதலில் இது எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். முதலில் மரபணுக் கோளாறுகள்.. இதய தசையை தடிமனாக மாற்றும் ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி (HCM) போன்ற மரபணு காரணங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அடுத்து அதிகமாக உடல் உழைப்பைச் செலுத்துவது. ஓய்வே இல்லாமல் அதீதமாக உடல் உழைப்பு வேலைகளைச் செய்வது, முறையற்ற தீவிர உடற்பயிற்சி ஆகியவை ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை ஆபத்தான நிலைக்கு உயர்த்தி, இதயத்தைப் பாதிக்கிறது. அப்போது சில சமயம் இதய செயலிழப்பும் ஏற்படலாம். அதாவது இதய தசை நார் குலைந்து, அழுத்தம் அதிகரிப்பதால் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது. இதனால் இதய செயலிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்..
காரணங்கள்:
நீரிழப்பு, ஒழுங்கற்ற தூக்க முறை, போதியளவு ஓய்வு எடுக்காமல் இருப்பது போன்ற வாழ்க்கை முறை காரணங்களும் கூட இதய செயலிழப்பு ஆபத்தை அதிகரிக்கிறது இதில் மற்ற விஷயங்கள் குறித்துக் கூட நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், நீரிழப்பால் இதய செயலிழப்பு ஏற்படும் என்பது பலருக்கும் தெரியாது. உடலில் போதியளவில் நீர் இல்லை என்றால் ரத்தம் பிசுபிசுப்பாக மாறுகிறது. இதனால் இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. அதுபோன்ற சூழலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை காரணமாக இதயத்தின் எலக்டிரிக் சிக்னல்கள் ஒழுங்கற்று மாறலாம். இதனால் இதய செயலிழப்பு பாதிப்பும் கூட ஏற்படும்.
திடீர் மாற்றம்:
அதேபோல அதீத வெப்பம் அல்லது அதீத குளிர் என உடல் வெப்பம் திடீரென வேகமாக மாறும் போது ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டி இருக்கும். மேலும், நீரிழிவு, கொலஸ்ட்ரால் இருப்போர் அல்லது குடும்பத்தில் வேறு யாருக்காவது இதுபோன்ற பாதிப்புகள் இருந்தாலும் கூட இதய செயலிழப்பு உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்
கடைசியாக மன அழுத்தம்.. நம்ம ஊரில் இங்கே பெரும்பாலான நபர்களுக்கு மன அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.. ஆனால், இதுவும் கூட இதய செயலிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அட்ரினலின் சுரப்பை அதிகரிக்கிறது.
தடுப்பது எப்படி:
இதய செயலிழப்பு வருவதைத் தடுக்க குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை இதய பரிசோதனை செய்யுங்கள்.தேவையான அளவு நீர் சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஓவர் உடற்பயிற்சி கூடாது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும்.. புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் யோசிக்காமல் அதை உடனே நிறுத்தவும்.. சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியும் ரொம்பவே முக்கியமானது. இதன் மூலம் இதய செயலிழப்பை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும் அதற்கான அபயத்தை வெகுவாக குறைக்கலாம்.












Click it and Unblock the Notifications