காங். அரசின் நலத் திட்டங்களை பார்த்து வெளிநாட்டவர் அதிசயிக்கின்றனர்: ராகுல் காந்தி
டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று தொடங்கி வைத்து பேசிய ராகுல் காந்தி, உணவு பாதுகாப்பு மசோதாவுக்காக பணத்தை நாங்கள் வீணாக செலவழிக்கிறோம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நாங்கள் சொல்லுகிறோம் மக்களுக்கு உணவு கொடுப்பது என்பது பணத்தை வீணாக்குவதாகாது.
முன்பெல்லாம் மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி பேசுவார்கள்.. இப்போதெல்லாம் உரிமைகளைப் பற்றி பேசுகின்றனர்.. அந்த வகையில் மக்களின் உணவு உரிமைக்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்திருக்கிறோம். வெளிநாட்டவர் எங்களை சந்திக்கும் போதெல்லாம் உணவு உத்திரவாத திட்டம், வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றை பார்த்து அதிசயிக்கின்றனர். அவர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
டெல்லி மாநிலம் எத்தகைய உட்கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தேசம் நன்கு அறியும். இது காங்கிரஸால் நிகழ்ந்தது. காங்கிரஸால் மட்டுமே சாத்தியமானது. நாங்கள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. டெல்லியில் காங்கிரஸ் அரசு எத்தனை மேம்பாலங்களை கட்டியுள்ளது? எப்படியான சாலை வசதிகளை கொண்டிருக்கிறது? மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தியிருப்பதை இந்த நாடே நன்கு அறியும்.
கிராமங்களில் இருந்து டெல்லிக்கு ஒருநாளேனும் வந்து செல்வோருக்கு அவர்களது அனைத்து கனவுகளையும் நாங்கள் நிறைவேற்றித்தர காத்திருக்கிறோம் என்றார்.
லோக்சபா தேர்தலையொட்டி ஜெய்ப்பூரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் நரேந்திர மோடி பேசிய அதே நேரத்தில் டெல்லியில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் காந்தியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.