நெஞ்சை பிளந்த வைத்த செப்டம்பர் 11..நீங்கா நினைவுகளுடன் நினைவுகூரும் அமெரிக்கர்கள்!
நியூயார்க்: அமெரிக்கர்கள் மட்டுமல்ல.. உலகமே நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தாக்குதல் செப்டம்பர் 11.. 3 ஆயிரம் பேரை பலி கொண்ட அமெரிக்கா மீதான வான் தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு நாள்..
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தகர்த்தனர் ஒசாமா பின்லேடனின் அல் குவைதா இயக்க தீவிரவாதிகள்.. ஈராக் மீதான அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புக்கான எதிர்வினை என்று பிரகடனம் செய்து கொண்டது அல்குவைதா.
ஆனால் உலகம் இதுவரை கண்டிராத ஒரு கொடூர முறையில் தாக்குதலை நடத்தியிருந்தனர் அல்குவைதாவினர்.
விமானங்களை அல்குவைதா தீவிரவாதிகள் கடத்தி உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
56 நிமிடங்கள் எரிந்த தென் கோபுரம்
உலக வர்த்தக மையத்தின் தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது.
102 நிமிடம் எரிந்த வடகோபுரம்
உலக வர்த்தக மையத்தின் வடகோபுரமோ மொத்தம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது.
பலி எண்ணிக்கை 2983
இந்த கொடூர சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 2983. நெஞ்சை பிளக்கச் செய்த இந்த தாக்குதலின் 12வது ஆண்டு நினைவையொட்டி பல்வேறு அமைதி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைதி நிகழ்ச்சிகள்
முதல் விமானம் வட கோபுரம் மீது அமெரிக்க நேரப்படி 8.46 மணிக்கு மோதியது. அந்த நேரத்திலும் பின்னர் தென் கோபுரம் மீது தாக்குதல் நடந்த 9.03 மணிக்கும் நகரம் முழுவதுமே அமைதி கடைபிடிக்கப்படுகிறது.
பென்டகன்..
பென்டகன் மீது விமானம் மோதிய 9.37, தென் கோபுரம் விழுந்த 9.59, வட கோபுரம் சரிந்த 10.28 ஆகிய நேரங்களிலும் அமைதி கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செப்டம்பர் 11 தேசிய நினைவக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.
ஒபாமா
வாஷிங்டனில் அதிபர் ஒபாமா, பென்டகனில் நடைபெறும் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இணையதளம்
இவை அல்லாமல் 911memorial.org என்ற இணையதளம் சார்பாகவும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.