அடுத்தடுத்து பயங்கரம்.! காஷ்மீரில் பதற்றம்.. 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கர கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், நேற்று நள்ளிரவு 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர். காஷ்மீரில் கடந்த பல மாதங்களாகவே 'டார்கெட் கில்லிங்' எனப்படும் ஒருதரப்பு மக்களை குறிவைத்து தாக்கும் உத்தியை தீவிரவாதிகள் பின்பற்றி வருகின்றனர்.
கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றை தீவிரப்படுத்திய போதிலும், இத்தகைய தாக்குதலை ராணுவத்தினராலும், போலீஸாராலும் தடுக்க முடியவில்லை என்பதே அங்கு யதார்த்த சூழலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தி படித்தால்.. தமிழ் அழியாது.. திமுகதான் அழியும்! ட்விட்டரில் பாஜக பேசிய “புது லாஜிக்”
அரங்கேறும் பயங்கர கொலைகள்..
காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் குறிப்பிட்ட தரப்பு மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, காஷ்மீரில் உள்ள வெளிமாநிலத்தவர்கள், காவல்துறையில் பணிபுரியும் முஸ்லிம்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் வாரத்துக்கு இரண்டு கொலைச் சம்பவங்களாவது காஷ்மீரில் அரங்கேறி விடுகிறது.
வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பண்டிட்டுகள்
இதனிடையே, தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறவே மக்கள் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்டுகளின் நடமாட்டம் கணிசமாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காஷ்மீர் பண்டிட்டுகளில் 6,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 5 ஆண்டுகளாக அலுவலகம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 வெளிமாநிலத்தவர்கள் கொலை
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹார்மென் பகுதியில் நேற்று நள்ளிரவு குண்டுவெடிப்பு சத்தம் பயங்கரமாக கேட்டது. இதையடுத்து, சிறிது நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு வந்து பார்த்த போது இரண்டு பேர் உடல் சிதறி உயிரிழந்திருந்தனர். இதுகுறித்து தகலவறிந்த போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்சாகர் (25) மற்றும் மோனிஷ் குமார் (29) என்பதும், அவர்கள் கடந்த ஓராண்டாக இங்கு தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட தீவிரவாதி
இந்த சூழலில், போலீஸாரும், ராணுவத்தினரும் நள்ளிரவு நடத்திய அதிரடி வேட்டையில் இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி பிடிபட்டான். விசாரணையில், அவனது பெயர் இம்ரான் பஷீர் கனி என்பதும், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட யார் உத்தரவிட்டது; இன்னும் யார் யார் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, காஷ்மீர் பண்டிட்டுகள் உள்ளிட்டோர் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாகவும் உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.