கங்குலி சிறப்பான சதம் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டாக்கா:
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை தொடர்ந்த பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கங்குலி சிறப்பாக ஆடி சதமடித்தார்.
இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணிமுதலில் பேட் செய்தது. 25.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்தது. இதையடுத்து,ஆட்டம் நிறுத்தப்பட்டு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதன்கிழமை தனது ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. பஷார் 57ரன்கள், அமினுல் இஸ்லாம் 47, அக்ரம் கான் 64, நைமூர் ரஹ்மான் 39 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குமரன் 54 ரன்களுக்கு3 விக்கெட்டுகளும், டெண்டுல்கர் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
50 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. வழக்கம்போல டெண்டுல்கரும், கங்குலியும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக தனது ஆட்டத்தைத் தொடங்கினர். போகப்போக இருவரும் தங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தில்இறங்கினர். குறிப்பாக டெண்டுல்கர் வேகமாக ரன்கள் குவித்தார். அவர்25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்துவந்த புதுமுகம் ஹேமங் பதானி நிதானத்துடன் விளையாடினார்.
ஒருமுனையில் அவர் பொறுமையான ஆட்டம் ஆட, மற்றொரு முனையில் கங்குலி தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். பங்களாதேஷ்வீரர்களின் பந்துவீச்சை அவர் சிதறடித்தார். இதற்கிடையே, 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பதானி அவுட்டானார். அடுத்து வந்தார்அசாருதீன்.
அவரும், கங்குலியும் இணைந்து விளையாடி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கங்குலி 135 ரன்கள் எடுத்தும், அசாருதீன்35 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கங்குலியின் ஸ்கோரில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.ஆட்டநாயகராக சதமடித்த இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. பங்களாதேஷுக்கு எதிராக ஆட்டங்களில்வென்றதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.