மருமகள், பேரனைக் கொன்றவருக்கு தூக்கு தண்டனை
கரூர்:
சொத்துத் தகராறில் மருமகள் மற்றும் பேரனை கொலை செய்து, மருமகளின் தலையோடு போலீசில் சரணடைந்த மாமனாருக்குஇரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த ஓமந்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (52). இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.கிருஷ்ணசாமிக்கு நிலம் உண்டு. இவர் தனது மகன் கோவிந்தராஜூவுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மலர்க்கொடி (30), என்ற பெண்ணை கோவிந்தராஜ் விரும்பினார். பின்னர்மலர்க்கொடியை திருமணம் செய்து கொண்டார். மலர்க் கொடிக்கு ஏற்கனவே பிரபாகரன் (10) என்ற மகன் உண்டு. பிரபாகரன்ஓமந்துரை பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தத் திருமணத்துக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து தனது மகனுடன் தங்கியிருக்காமல் விலகிச் சென்றுவிட்டார்.
தானும் மகனும் பிரிந்ததற்கு மருமகள் மலர்க் கொடி தான் காரணம் என அவர் நினைத்தார். இதனால் மருமகளுடன் அடிக்கடிசண்டை போட்டு வந்தார். மேலும், தனது சொத்தில் பேரன் பிரபாகரனுக்குப் பங்கில்லை எனக் கூறி வந்துள்ளார்.
இந் நிலையில், கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் கோவிந்தராஜூவின் வீட்டிற்கு வந்தார். அங்கு மகன்கோவிந்தராஜ் இல்லை. அப்போது தனது மருமகள் மலர்க்கொடியுடன் சொத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து மலர்க்கொடியை வெட்டினார். இதில், மலர்க்கொடியின்தலை துண்டானது.
ஆத்திரம் தீராத கிருஷ்ணசாமி, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பிரபாகரனையும் வெட்டினார். இதில் பிரபாகரனும் இறந்துபோனான். இதன் பின்னர் கிருஷ்ணசாமி, மலர்க்கொடியின் தலையை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டு, சைக்கிளில்புறப்பட்டார்.
கையில் தலையுடன் சைக்கிளை ஓட்டி வந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமியைப் பார்த்து ஊரே மிரண்டு ஓடியது. பொதுமக்கள்அதிர்ந்து போயினர். நேராக காவல்நிலையம் சென்ற கிருஷ்ணசாமியைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டரும் கூட பயந்து போனார்.
போலீசார் உடனே இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி இராமகிருஷ்ணன் விசாரித்தார். அவர் அளித்ததீர்ப்பில், கிருஷ்ணசாமிக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அவர் தனது தீர்ப்பில் இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். கிருஷ்ணசாமியை சாகும் வரைதூக்கில் தொங்க விட வேண்டும். கிருஷ்ணசாமி வெட்டிக் கொன்ற செயல் மிகவும் கொடூரமானது. அபூர்வத்திலும்அபூர்வமானது. குற்றவாளிக்குக் குறைந்தபட்சத் தண்டனை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட நீதிமன்றம் துவங்கப்பட்டது. இந்த மாவட்டநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளில் இதுவே அதிகபட்சத் தண்டனையாகும்.
பத்து நாட்களில் வழக்கு விசாரணை துவங்கப்பட்டு துரிதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மாவட்ட மக்கள் பாராட்டிவருகின்றனர்.