இன்றைய தினப்பலன்
ஜெயலலிதாவும் நானும் சந்தித்தாலும், சந்தித்தோம் - பத்திரிக்கையுலகம் புகுந்து விளையாடிவிட்டது. சிமிட்டா கொடுத்தான் ராஜா தேசிங்கு! பறக்குதுபார் பஞ்சகல்யாணி குதிரை! என்ற மாதிரி, பத்திரிக்கையாளர்கள் சிமிட்டா கொடுக்க, அவர்களுடைய கற்பனை குதிரைகள் இறக்கை கட்டிக் கொண்டுபறக்கத் தொடங்கிவிட்டன.
பலவித செய்திகள் வெளியாகின. முரசொலிக்கு கோபம் வந்து, என்ன இது? புஷ்ஷும், காஸ்ட்ரோவுமா சந்தித்து விட்டார்கள்? என்று கேட்டு,இதுபற்றி ஒரு தலையங்கமே எழுதி, இந்த சந்திப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது.
அதோடு திருப்தியடையாமல், தினம் ஒரு கார்ட்டூன் வெளியிட்டு, முரசொலி, இந்த அனாவசிய முக்கியத்துவத்தை, முக்கிய செய்தியாக்கியது.
பா.ஜ.க.வினர் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி, பலருடைய சந்தேகத்தைக் கிளற - எந்த சாணக்கியனும் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறி,தனது பதட்டத்தை அமைச்சர் அன்பழகன் பறை சாற்ற - பழைய நண்பர்களின் சந்திப்பு என்று கூறியஜெயலலிதா, அரசியலும் பேசப்பட்டது என்று சொல்லி ஊதிவிட - இதில்முக்கியத்துவம் இல்லை என்று சொல்லிய முதல்வர், போகப் போகத் தெரியும் என்றுகூறி, விசிறி விட - பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கிளறி விட - வதந்தித்தீகொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன? ஜெயலலிதா, சென்ற தீபாவளியன்றுஎன்னோடு டெலிஃபோனில் பேசினார்: பிறகு நாங்கள் மூன்று முறை சந்தித்தோம்: சிலமுறைகள் டெலிஃபோனில் பேசினோம்.
இந்த பேச்சுகளில் அரசியல் பற்றி குறிப்பாக எதுவும் பேசப்படவில்லை. சென்ற சிலவருட அகில இந்திய, உலக அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிப் பேசினோம்: ஆங்கிலப்புத்தகங்கள் பற்றிப் பேசினோம்.
மஹாபாரதம், ராமாயணம் பற்றிப் பேசினோம்:என்னுடைய நாடகங்கள் பற்றிபேசினோம். உடல் நிலை பற்றிப் பேசினோம் ...இப்படி பல விஷயங்கள் பற்றிப்பேசினோமே தவிர, இன்றைய தமிழக அரசியல் பற்றியோ, அமையக் கூடியகூட்டணிகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை.