வீரப்பன் தேடுதல் வேட்டை: மத்திய படை விலகியது
அந்தியூர்:
சந்தன மரக்கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக-கர்நாடக அதிரடிப் படையுடன் இணைந்து செயல்பட்டுவந்த எல்லை பாதுகாப்பு படையினரை (பி.எஸ்.எப்) மத்திய அரசு திரும்ப அழைத்துவிட்டது.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முதல் தங்கள் முகாம்களை காலிசெய்து விட்டு புறப்பட்டுசெல்லத் தொடங்கியுள்ளனர்.
சென்ற ஆண்டு பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்சிச் சென்று 108 நாட்கள் பிணைக் கைதியாகவைத்திருந்து விட்டு விடுதலை செய்தார். இதையடுத்து வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர்தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வீரப்பனை பிடிக்கும் பணியில்அதிரடிப்படையினருடன் இணைந்து செயல்பட எல்லைப் பாதுகாப்புப் படையை அழைத்துவந்தது.
வட மாநிலங்களிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் எல்லை பாதுகாப்பு படையினர் வீரப்பனை தேடும் பணிக்காககடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈரோடு வந்தனர்.
வீரப்பன் பதுங்கியுள்ள காட்டுப் பகுதியான சத்தியமங்கலம், கடம்பூர், அந்தியூர். தட்டக்கரை உள்ளிட்டபகுதிகளுக்கு சென்று, சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினரும் வீரப்பன்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் சத்தியமங்கலம் பகுதியில் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினரைமத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது. இவர்கள் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையடுத்து சத்தியமங்கலம், திம்பம், பன்ணாரி, குண்டேரிபள்ளம், அந்தியூர் காட்டுப்பகுதியிலிருந்த எல்லைபாதுகாப்பு படையினரும், கோவை காட்டுப் பகுதியிலிருந்த எல்லை பாதுகாப்பு படையினரும் தங்கள் முகாம்களைகாலி செய்து விட்டு புறப்பட தயாராகியுள்ளனர்.
இவர்கள் அடுத்த சில நாட்களில் ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு செல்லவிருக்கின்றனர். பன்ணாரி முகாமிலிருந்தஎல்லை பாதுகாப்பு படையினர் இன்று (திங்கள் கிழமை) புறப்பட்டு செல்கின்றனர்.
உள்துறை செயலாளர் பேட்டி:
இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எல்லை பாதுகாப்பு படையினர் திரும்ப அழைக்கப்பட்டிருப்பதால் வீரப்பனை பிடிக்கும் பணியில் எந்தபின்னடைவும் ஏற்படாது.
தமிழக சிறப்பு போலீஸ் படையின் இரண்டு கம்பெனிகள் வீரப்பனை தேடி பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும்என்றார்.