என்னைக் கொல்ல முயற்சி நடக்கவேயில்லை: சத்ய சாய்பாபா விளக்கம்
பெங்களூர்:
தன்னைக் கொல்ல எந்த முயற்சியும் நடக்கவில்லை என சத்ய சாய் பாபா விளக்கமளித்துள்ளார்.
தேவையில்லாமல் இது குறித்து பரபரப்பான செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள தனது ஆஸ்ரமத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருந்த பாபாவை நோக்கி சோமசுந்தரம் என்ற இளைஞர் பாய்ந்தார். அவர் கையில் ஏர் பிஸ்டல்துப்பாக்கியும் இருந்தது. ஒசூரைச் சேர்ந்த அந்த வாலிபர் இப்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பாபாவிடம் ஆசி பெறுவதற்காக பலமுறை வந்ததாகவும் தனக்கு ஆசியே கிடைக்காததால் யாராவது ஒரு பக்தரைக்கடத்தி அதை வைத்தே பாபாவிடம் ஆசி பெற்றுவிடலாம் என தான் கருதியதாகவும் அதனால் தான்துப்பாக்கியுடன் வந்ததாகவும் அந்த வாலிபர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஆனால், இந்தச் சம்பவம் குறித்து பாபாவோ அல்லது ஆசிரம நிர்வாகிகளோ எந்த கருத்தும் தெரிவிக்காமல்இருந்து வந்தனர்.
இந் நிலையில் இன்று பாபா இச் சம்பவம் குறித்து தனது பக்தர்களிடையே விளக்கினார். ஒயிட்பீல்டில் உள்ளசத்யசாய் மருத்துவ மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி இன்று நடந்த நிகழ்ச்சியில் பாபாபேசியதாவது:
மிகச் சாதாரண விஷயத்தை செய்தித் தொடர்பு சாதனங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. அங்கு ஒன்றுமேநடக்கவில்லை. இது தொடர்பாக வரும் செய்திகளில் உண்மையே இல்லை. யாரும் எனக்கு அருகில் வரவில்லை.இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும்.
அந்த வாலிபர் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை வைத்து ஒரு பறவையைத் தான் கொல்ல முடியும். அவ்வளவுசாதாரணமான துப்பாக்கி அது. அது ஒரு சாதாரண விஷயம்.
என் இதயமெலாம் அன்பு தான் நிறைந்திருக்கிறது. யாருக்கு எதிராகவும் என் மனதில் எந்தக் கோபமும் இல்லை.வியாழக்கிழமை சம்பவம் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவிவிட்டது. ஜப்பான், ஜெர்மனி, சுவீடன் என பலநாடுகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
செய்தித் தொடர்பு சாதனங்கள் தவறான செய்தியை வெளியிட்டுவிட்டன. கற்பனைகள், கிசுகிசுக்கள் என நிருபர்கள்தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதிவிடுகிறார்கள். ஒரு சிலர் தான் உண்மையான செய்திகளைவெளியிடுகிறார்கள்.
நிறைய பணம் கிடைக்கும் என்பதால் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள். எதற்காக கிசுகிசுக்கள்எழுதுகிறார்கள். அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டாமா?
இப்போது இவர்கள் (டிவி செய்தியாளர்கள்) வந்து விட்டார்கள். இவர்களுக்கு வேலையே கிடையாது. அவர்கள்தொடர்ந்து எதையும் ஒளிபரப்பி விடுகிறார்கள்.
எனக்கு 76 வயதாகிறது. இதுவரை என் வாழ்வில் ஒரு நிருபரைக் கூட சந்தித்ததில்லை. பகவானுக்கு நிருபர்களிடம்எந்த வேலையும் இல்லை. பொய்ச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் நிருபர்கள் பாவங்கள் செய்கிறார்கள்.அவர்கள் அதற்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்றார் பாபா.
இந் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் கலந்துகொண்டார்.