மீண்டும் ஒரு நிதி நிறுவன மோசடி: ரூ.4 கோடியை சுருட்டிய தம்பதி கைது
சென்னை:
சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 கோடி அளவுக்கு மோசடி செய்த ஒரு தம்பதியைப் போலீசார் கைதுசெய்தனர்.
சென்னையில் மீண்டும் நிதி நிறுவன மோசடி அதிகரித்து வருகிறது. பாலக்காடு நிதி நிறுவனம் என்ற பெயரில்சமீபத்தில் தான்ஒரு நிறுவனம் ரூ.7 கோடி அளவுக்கு மோசடி செய்து வாடிக்கையாளர்களுக்கு நாமம் போட்டது.
இந்நிலையில் மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.4 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு "வதவத"வென நிதி நிறுவனங்கள் பெருகிக் கொண்டிருந்தன. ஊர் பெயர்தொடங்கி தெருப் பெயர் வரை கொண்ட நிதி நிறுவனங்கள் செய்த பிரச்சாரத்தால் கவர்ந்திழுக்கப்பட்டபொதுமக்கள் அலை அலையாக அங்கு முதலீடு செய்தனர்.
இந்நிலையில் திடீரென ஒவ்வொரு நிறுவனமாக வாடிக்கையாளர்களுக்கு அல்வா தரத் தொடங்கியது.கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக பல மோசடி நிதி நிறுவனங்கள் மூடு விழாகண்டன. சில வருடங்களாக நிதி நிறுவனத் தொல்லைகள் இல்லாமல் தமிழகம் அமைதியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் நிதி நிறுவன மோசடி தொடங்கியுள்ளது. சென்னையில் பாலக்காடு நிதி நிறுவனம் என்றபெயரில் ஒரு நிறுவனம் ரூ.7 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. அதன் அதிபர்கள் எஸ்கேப் ஆகி ஓடிவிட்டனர். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று கூட நம் மக்களுக்குத் தெரியவில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது. சென்னை ஷெனாய் நகர் பகுதியில் வசித்துவருபவர் ரங்காராவ். இவரது மனைவி ஷோபா. இவர்களுக்கு ராஜு, ரேகா என்ற பிள்ளைகள் உள்ளனர்.ரங்காராவின் அம்மா வெங்கடசுப்பம்மா. இவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ரங்காராவும், ஷோபாவும் தங்களது மகள் ரேகாவின் பெயரில் சீட்டுப் பிடிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.தங்களது பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இங்கு சீட்டுப் பிடித்தால் அதிக அளவு வட்டி தருவதாக கூறிவாடிக்கையாளர்களைச் சேர்த்தனர்.
குடும்பமே இதில் ஈடுபட்டிருப்பதால் மக்களும் நம்பி பணத்தைக் கொட்டத் தொடங்கினர். இந்த நிலையில், கஸ்தூரிஎன்பவர் ரூ.4 லட்சம் வரை இங்கு முதலீடு செய்தார். அதன் முதிர்வுக் காலம் முடிந்ததும் பணத்தை வட்டியுடன்திருப்பித் தரக் கோரினார்.
ஆனால் ரங்காராவ் தம்பதியினர் அவருக்குப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தனர். மேலும், தன்னைப்போலவே பலரும் பணம் கேட்டு வருவதைப் பார்த்த கஸ்தூரி சுதாரித்தார். இது மோசடிக் கும்பல் என்பதைஉணர்ந்த அவர் உடனடியாகப் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
மத்திய குற்றப் பிரிவு போலீசார் ரங்காராவ் மற்றும் ஷோபாவை விசாரித்துக் கைது செய்தனர். அவர்களது மகள்ரேகாவும், அம்மா வெங்கடசுப்பம்மாவும் கர்நாடகத்திற்குத் தப்பி விட்டனர். மகன் ராஜு, அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்.
கிட்டத்தட்ட ரூ.4 கோடி அளவுக்கு இந்தக் கும்பல் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.தப்பியோடியவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.