Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாபா" படத்தை பார்க்க வேண்டாம்: ராமதாஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

வன்னிய இனத்தைச் சேர்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த்தின்"பாபா" படத்தை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் பார்க்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறினார்.

மயிலாடுதுறையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னிய மகளிர் அமைப்பின் மாநாட்டைத் துவக்கி வைத்துராமதாஸ் பேசுகையில்,

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது கர்நாடக முதல்வரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசும் என் உதவியைக் கேட்டார்கள். இன்று ஒரு நடிகர் வீரப்பனைத் துவம்சம் செய்ய வேண்டும் என்றுபேசுகிறார்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட போது இவர் எங்கே போயிருந்தார்? இப்போது வீராவேசமாகப் பேசும் ரஜினிவீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்க அப்போதே காட்டுக்குப் போயிருக்க வேண்டியது தானே?

அப்படிப்பட்டவர் நடித்த "பாபா" படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது. ரஜினிக்கு வன்னியசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் ரசிகர் மன்றம் வைக்கக் கூடாது.

இன்று அந்த நடிகர் தன்னுடைய படத்தை ரூ.79 கோடிக்கு விற்றுள்ளார். "பாபா" படத்தின் மூலம் அவர் யாரை வாழவைக்கிறார்? சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் தான் ரஜினி கற்றுத் தருகிறார். இவற்றைத் தயாரிப்பவர்களைத்தான் வாழ வைக்கிறார். மக்களையா வாழ வைத்தார்?

தமிழ்நாட்டு மக்கள் குடித்தும் சினிமா பார்த்தும் லாட்டரி சீட்டு வாங்கியும் வீணாகிப் போய்விட்டனர்.

நடிகர் சங்கத்துக்கு கடனாம். அதை இந்த நடிகர்கள் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை வைத்து அடைக்கவேண்டியது தானே. அதைவிட்டுவிட்டு நாடு தாண்டிப் போய் அங்குள்ள தமிழர்களிடம் கலை நிகழ்ச்சி என்றபெயரில் பணம் பறிக்கிறார்கள்.

அரசியலைப் பற்றிப் பேச எந்த நடிகர்களுக்கும் அருகதை கிடையாது. நடிகர்களின் பேச்சைக் கேட்டு ஆடும்பழக்கம் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கேரளா, கர்நாடகத்தைப்பார்த்து தமிழர்கள் திருந்தவேண்டும். அங்கு சினிமாகாரர்கள் பின்னால் போய் மக்கள் சீரழியவில்லை.

நான் இப்படியெல்லாம் பேசுவதால் என்னைத் தான் தாக்குவார்கள். சினிமாக் காரர்களுக்குப் பின்னால் கொடிபிடித்தே நம் நாட்டு மக்கள் கெட்டு குட்டிச் சுவராய் போய் விட்டனர்.

பத்திரிக்கைகள் மீது பாய்ச்சல்:

பாட்டாளி மக்கள் கட்சி குறித்து நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் தவறாகவே தொடர்ந்து எழுதி வருகின்றன.இந்தப் போக்கை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பத்திரிக்கைத் துறையையே ஸ்தம்பிக்கவைத்து விடுவோம்.

கடந்த 1980களில் வன்னியர் சங்கப் போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால்,என்னை "மரம் வெட்டி" என்று பத்திரிக்கைகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

ஆனால் எனது மகன் அன்புமணியின் தலைமையிலான பசுமைத் தாயகம் அமைப்பு 2 லட்சம் மரக் கன்றுகளைநட்டு சாதனை படைத்துள்ளது. இதைப் பத்திரிக்கைகள் எழுதுவதில்லை.

அதேபோல, விடுதலைப்புலிகள் குறித்து உங்களது நிலை என்ன என்ன என்று கேட்டு என்னை பத்திரிக்கைகள்தூண்டி விட முயற்சிக்கின்றன. நாங்கள் பொறுமை காத்து வருகிறோம். எங்களைச் சீண்டாதீர்கள். சீண்டினால்அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும்.

தமிழகத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தால் அதற்கான பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவுக்கு ஒரு சிக்னல் கொடுத்தால் போதும், ஒரு கடையில் கூட நாளிதழ்களை விற்கமுடியாது.

வன்னியர் ஆள வேண்டும்.. அதனால்..

வன்னியர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றால் தமிழகத்தை இரண்டாகப் பிரித்தே ஆக வேண்டும்.வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய நியாயம் கிடைக்கவில்லை.

எனவே தான், வன்னியர்களுக்கு ஆட்சியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தை இரண்டாகப்பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழகத்தைப் பிரிக்கக் கோரும் எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தே தீருவோம். என்னை ஜாதி வெறியன் என்று பலரும்குறிப்பிடுகிறார்கள். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. எனது ஜாதியை உயர்த்திப் பேசுவது தவறா?

பொது வாழ்க்கையிலிருந்து என்னை விரட்டியடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படிக்கூறுவதற்கு அவருக்கு என்ன அருகதை உள்ளது? அவர் தொழில் என்ன, அவருடைய அரசியல் வரலாறு என்னஎன்பதையெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

சமீபத்தில் ராஜ்குமாரின் மகன் புனித் நடித்துள்ள அப்பு என்ற கன்னடப் படத்தின் 100வது நாள் விழா பெங்களூரில்நடந்தது. அப்போது தனது தாய் மொழியான கன்னடத்தில் ராஜ்குமாரையும் கர்நாடகத்தையும் வாழ்த்திப்பேசியிருந்தார் ரஜினி. அந்தக் கூட்டத்தில் வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ரஜினியின் அந்தப் பேச்சுக்கு ராமதாஸ் இவ்வாறு பரபரப்பாக பதில் கூறியுள்ளார்.

கண்காட்சி ஆகும் "பாபா" செட்டுகள்:

இதற்கிடையே "பாபா" படத்திற்காகப் போடப்பட்ட செட்டுகளை கண்காட்சிகளாக மாற்றி அதன் மூலமும்வருமானம் ஈட்ட ரஜினி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் அதற்காகப் போடப்படும் செட்டுகள் அனைத்தையும்கலைத்து விடுவார்கள். ஆனால் "பாபா" செட்டுகள் இன்னும் அகற்றப்படவில்லை.

சென்னை கிண்டியில் உள்ள கேம்பகோலா மைதானத்திலும் பிரசாத் ஸ்டுடியோவிலும் போடப்பட்ட "பாபா"அரங்குகள் அப்படியே கண்காட்சிக் கூடங்களாக மாற்றப்படவுள்ளன.

"பாபா"விற்காக ரஜினி பயன்படுத்திய தொப்பி, கண்ணாடி, கத்தி மற்றும் பிரத்தியேகமான உடைகளும் இந்தக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இங்கேயே "பாபா"டாலர்கள், "பாபா" போஸ்டர்கள் மற்றும் "பாபா" போட்டோக்கள் ஆகியவையும் விற்கப்படவுள்ளன.

இதன் மூலமும் ரஜினிக்குக் கணிசமான தொகை கிடைக்கும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+