உயர் நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற திருடன்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திருடும்போது பிடிபட்ட வாலிபர், பாட்டிலை உடைத்து வாயில் போட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
சென்னை எஸ்பிளனேடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் உயர் நீதிமன்ற வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுவரும் சட்ட உதவி மைய கட்டடத்திற்கு அருகே சில குழாய்களை திருடிக் கொண்டு இருந்தார்.
இதைப் பார்த்த உயர் நீதிமன்ற ஊழியர்கள் சிலர் விரட்டிச் சென்று முனுசாமியைப் பிடித்தனர். அவரை காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றபோது, திடீரென்று அவர்களிடமிருந்து முனுசாமி தப்பி ஓடினார்.
கீழே கிடந்த ஒரு பாட்டிலை எடுத்து உடைத்தவர், தனது கழுத்திலும் முகத்திலும் சரமாரியாக குத்திக் கொண்டார்.பின்னர் பாட்டிலை உடைத்து கண்ணாடித் துகள்களை வாயில் போட்டுக் கொண்டார்.
அதிர்ச்சியடைந்த உயர் நீதிமன்ற ஊழியர்கள் முனுசாமியை உடனடியாக அரசு பொது மருத்துவமனையில்கொணடு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.