புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா நீக்கம்
கிளிநொச்சி:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா நீக்கப்பட்டுள்ளார்.
புலிகளின் கிழக்கு மண்டல கமாண்டரான கருணா சில தினங்களுக்கு முன் பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மட்டக்களப்பு-அம்பாரை பகுதியின் கமாண்டராக இருந்த கருணா, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிரான சிலரால் தூண்டிவிடப்பட்டு,தமிழர்களைக் காட்டிக் கொடுத்துள்ளார். தமிழர்களுக்கும் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும் எதிராக செயல்படஆரம்பித்துள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு கீழ் உள்ள மண்டலத்தலைவர்கள் மற்றும் வீரர்கள் அவரது உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்துள்ளனர். மண்டலத் தலைவர்கள் பிரபாகரனைச் சந்தித்துநிலைமையை விளக்கி, கருணாவுடன் பணியாற்ற இயலாது என்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து புலிகள் இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கருணா நீக்கப்பட்டுள்ளார்.
கருணாவுக்குப் பதிலாக கிழக்குப் பகுதி சிறப்புக் கமாண்டராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டராக ராம்நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கமாண்டராக பிரபாவும், மட்டக்களப்பு-அம்பாரை மாவட்ட அரசியல் பிரிவின் தலைவராககெளசல்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று கிளிநொச்சியில் நிருபர்களைச் சந்தித்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இந்த அறிக்கையைவெளியிட்டார். அப்போது புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ், ராம், பிரபா, கெளசல்யனும் உடனிருந்தனர்.
நிருபர்களிடம் பேசிய ரமேஷ்,
தனிப்பட்ட முறையில் கருணா எடுத்த முடிவை யாரும் ஆதரிக்கவில்லை. கிழக்குப் பகுதியை புலிகளின் தலைமைபுறக்கணிப்பதாகவும், வட பகுதிக்கே அதிக அதிகாரம் வழங்கப்படுவதாகக் கருணா கூறியுள்ளதாக வரும் செய்திகள்தவறானவை. சமீபத்தில் கருணா தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூட வட-கிழக்கு பிராந்தியம் சமமாகபாவிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
மேலும் கிழக்குப் பகுதிப் படைகளை வட பகுதிக்கு அனுப்புமாறு பிரபாகரன் உத்தரவிட்டதாக வரும் செய்திகளில்உண்மையில்லை. இப்போது என்ன போரா நடக்கிறது? படைகளை இடம்மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.
புலிகளின் தலைமையகத்தில் வட பகுதியினருக்கே அதிக பிரதிநித்துவம் தரப்படுவதாக சொல்வதும் தவறு. தலைமையிடம்இருந்து கீழ் மட்டத்துக்கு உத்தரவுகளைக் கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பை வகிக்கும் புதியவன் மட்டக்களப்பைச்சேர்ந்தவர்தான்.
வன்னி பகுதியில் இலங்கை ராணுவத்துக்கு எதிராக போர் நடந்தபோது பிரபாகரன் தனக்கு அடுத்த நிலையில் கருணாவைவைத்திருந்தார். மட்டக்களப்பில் நடந்த அரசியல் கொலைகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை. இதில் இயக்கத்தின் மீதுகருணா புகார் கூறுவது தவறானது என்றார்.
தமிழ்ச்செல்வன் கூறுகையில், புலிகள் இயக்கம் தனது கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் எந்தக் காலத்திலும் சீர்குலையஅனுமதிக்காது என்பதைத் தான் கருணாவின் வெளியேற்றம் காட்டுகிறது. எந்தவிதமான புரளிகளையும் நம்ப வேண்டாம் எனமட்டக்களப்பு பகுதி மக்களை கேட்டுக் கொள்கிறோம். பிரபாகரனைப் பொறுத்தவரை யாழ்பாணமும் மட்டக்களப்பும் ஒன்றே.அதை அவர் வேறுபடுத்தி எல்லாம் பார்ப்பது இல்லை.
ஒரு தனிப்பட்ட மனிதனின் (கருணா) நிலை மாற்றத்தால் இலங்கை அமைதி முயற்சிகள் பாதிக்கப்படாது என்றார்.