செம்மொழியாகிறது தமிழ்!
டெல்லி:
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கவும், அதை மத்தியில் ஆட்சி மொழியாக அறிவிக்கவும் இன்றுமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோரின் பெயரில் இரு சர்வதேச விருதுகளை வழங்கவும் மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்துவற்புறுத்தி வந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு முந்தைய அரசுகள் பெரிய முக்கியத்துவம் தரவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்த நிலையில், அதன்கூட்டணிக் கட்சிகளான திமுக, மதிமுக, பா.ம.க ஆகியவற்றின் முக்கியக் கோரிக்கையாக செம்மொழி கோரிக்கைஇடம் பெற்றது.
மத்திய கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும்என்று அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழை செம்மொழியாக அறிவிக்கமுடிவு செய்து, அதற்கான ஒப்புதலை அளித்தது. இதற்கான உத்தரவு உடனே வெளியாகிறது. மேலும் மத்தியில்ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.
இத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி,
ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க மிகக் கடுமையான விதிகளை சாகித்ய அகாடமி வகுத்துள்ளது.செம்மொழிப் பட்டியலில் இடம் பெற குறைந்தது ஆயிரமாண்டு பதியப்பட்ட வரலாறு, செறிவு, அழகு,தனித்தியங்கும் தன்மை ஆகியவை தகுதிகள் அந்த மொழிக்கு வேண்டும்.
இந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்டதால் தான் தமிழ் மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் அவற்றின் தகுதியை வைத்தே சேர்க்கப்படும்.
மற்றபடி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதில் அரசியல் ஏதும் இல்லை. எதிர்காலத்தில் இந்தப்பட்டியலில் வேறு மொழி இடம் பெற வேண்டும் என்றால் அதற்கான விதிகளில் அந்த மொழிகள் பொருந்தவேண்டும் என்றார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர முடிவெடுக்கப்பட்டதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களானப.சிதம்பரம், தயாநிதி மாறன், அன்புமணி, பழனிமாணிக்கம், ராஜா ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்து பூங்கொத்துகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர்கள் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளனர்.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்படுவதன் மூலம் முதல் கட்டமாக பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலமாக இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.
செம்மொழி ஆராய்ச்சிக்கென ஒரு மையம் அமைக்கப்பட்டு தமிழாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
மேலும் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோரின் பெயரில் சர்வதேச விருதுகளை வழங்கவும் மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.