20ம் தேதி வரை ஜெயேந்திரர் கைதாக மாட்டார்!
கலவை (வேலூர்):
அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் கைதாகாமல் தப்ப ஜெயேந்திரர் தாக்கல் செய்ய முன் ஜாமீன் மனு மீதானவிசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது. அதுவரை ஜெயேந்திரரைக் கைது செய்ய மாட்டோம் எனநீதிமன்றத்தில் அரசு உறுதியளித்துள்ளது.
முன்னதாக ஜெயேந்திரர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கைதகாலம் என்ற சூழ்நிலை நிலவியது. இதனால் அவர் தற்போதுதங்கியுள்ள கலவையில் பரபரப்பு காணப்பட்டது.
அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் மாதவன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அண்ணா சாலையில் வைத்து தாக்கப்பட்ட வழக்கிலும்ஜெயேந்திரர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வைணவத் திருத்தலங்களில் சைவ மடாதிபதியான ஜெயேந்திரர் தலையீட்டை எதிர்த்துகுரல் கொடுத்த நிலையில் மாதவன் மீது அந்தக் கொலை வெறித் தாக்குதல் நடந்தது.
இதில் பின் மண்டை பிளந்து போய் அப்பல்லோவில் பல மாதம் சிகிச்சை பெற்று உயிருடன் திரும்பினார் மாதவன்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.
அதன் மீது நேற்று விசாரணை நடந்தபோது, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயேந்திரரைக் கைது செய்யக் கூடாதுஎன்று கோரினார் அவரது வழக்கறிஞர் தினகரன்.
ஆனால், இதை போலீஸ் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் ஏற்க மறுத்தார். முன் ஜாமீன் வழங்கப்பட்டால் தவிர ஒருவரைக் கைது செய்யஎந்தத் தடையும் போலீசுக்கு இல்லை என்றார். இந் நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி பேசுகையில்,
ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜெயேந்திரரை தென் இந்தியாவுக்கு வெளியே தங்க வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழகஅரசு மனு தாக்கல் செய்துள்ளது.
குன்றுக்கு முகம்மது செல்லாவிட்டாலும், அந்தக் குன்றே அவரைத் தேடி வரும் என்பார்கள். அதைப் போலத்தான் இதிலும். இவர் மடத்துக்குபோகாவிட்டாலும் மடம் இவரைத் தேடி வரும்.
மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று தென் மாநிலங்களில் எங்கு தங்கினாலும் சங்கர மடத்தின் செயல்பாட்டில் அவர்தலையிடுவார். சாட்சிகளைக் கலைப்பார். சங்கரராமன் கொலையிலும் ஆடிட்டர் மீதான தாக்குதல் வழக்கிலும் பெரும்பாலான சாட்சிகள்மடத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
அவர்களது பிழைப்பே மடத்தை நம்பித்தான் உள்ளது. இந் நிலையில் அவர் மடத்துக்கு வெளியே தங்குவதால் மட்டும் விசாரணையைசுதந்திரமாக நடத்திவிட முடியாது. விசாரணைக்கு அவர் முட்டுக்கட்டையாகவே இருப்பார். சாட்சிகளை மிரட்டுவார். வங்கிக் கணக்குகள்,மடத்தின் கணக்கு வழக்குகளைக் கூட திருத்துவார்.
இதனால் அவரை தென் மாநிலங்களுக்கு அந்தப் பக்கம் தங்க உத்தரவிடக் கோரி ஜாமீன் நிபந்தனைகளைத் திருத்தக் கோரியுள்ளோம்.
அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் 17ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் இந்த முன் ஜாமீன் மனு மீதானவிசாரணையை வரும் 20ம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும்.
அப்போது இடைமறித்த ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகரன், அப்படியானால் 20ம் தேதி வரை ஜெயேந்திரரை போலீசார் கைதுசெய்யக் கூடாது என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட அரசு வழக்கறிஞர் துரைசாமி, 20ம் தேதி வரை ஜெயேந்திரர் கைது செய்யப்பட மாட்டார் எனஉறுதிமொழியளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி முருகேசன் ஒத்திவைத்தார்.
முன்னதாக இன்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் உடனடியாக ஜெயேந்திரர் மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்றஎதிர்பார்ப்பு நிலவியது. இதனால் ஜெயேந்திரர் தற்போது தங்கியுள்ள கலவை ஆஸ்ரமத்தில் ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள், விஸ்வ இந்துபரிஷத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தொண்டர்கள், சங்கர மட பக்தர்கள் ஏராளமான அளவில் குழுமியிருந்தனர்.
20ம் தேதி வரை ஜெயேந்திரர் கைது செய்யப்பட மாட்டார் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட பின்னரே அவர்களது முகத்தில்நிம்மதி தெரிந்தது.












Click it and Unblock the Notifications