2 வங்கி கணக்குகளை பயன்படுத்த மடத்திற்கு அனுமதி!
சென்னை:
சங்கர மடத்தின் அன்றாடச் செலவுகளுக்காக இரு வங்கிக் கணக்குகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சங்கர மடத்தின் 183 வங்கிக் கணக்குகளையும் காஞ்சிபுரம் போலீஸார் முடக்கி வைத்துள்ளனர். இதை எதிர்த்து சங்கர மடம்சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று நீதிபதி கே.டி.சிவசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது சங்கர மடம் சார்பில்ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன், வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்ததை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
போலீஸாரின் செயலால் சங்கர மடத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சங்கர மடத்தின்கோரிக்கையை ஏற்கலாமா என்று அரசு வழக்கறிஞர் துரைசாமியிடம் நீதிபதி சிவசுப்ரமணியம் கேட்டார்.
அதற்கு துரைசாமி பதிலளிக்கையில், சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகளில் ஏதாவது ஒரு கணக்கை மட்டும் வேண்டுமானால்பயன்படுத்த அனுமதிக்கலாம். அதேசமயம், ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது, எதற்காக அப் பணம்செலவிடப்பட்டது என்ற விவரத்தை விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக் கணக்கை பயன்படுத்திக் கொள்வதாக சங்கரமட வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் துரைசாமி, அந்தக் கிளையில் சங்கர மடத்துக்கு மொத்தம் 10 கணக்குகள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றைத்தான் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து 10 கணக்குகளில் எந்தக் கணக்கைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை தெரிவிக்குமாறு கூறிவிசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
பிற்பகலில் நீதிமன்றம் கூடியதும் பேசிய மடத்தின் வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன், குறைந்தபட்சம் 5 வங்கிக்கணக்குகளையாவது பயன்படுத்தவும், அதில் உள்ள பணத்தை எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, வரும் 25ம் தேதி வரை இந்தியன் வங்கியில் உள்ள ஒரு கரண்ட் அக்கெளன்டையும், ஒரு சேவிங்ஸ்அக்கெளன்டையும் மட்டும் சங்கர மடம் பயன்படுத்தலாம் என இடைக்கால உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் அன்றாட செலவு விவரங்களை நீதிமன்றத்திடமும் அதன் நகலை காஞ்சிபுரம் போலீசாரிடமும் ஒப்படைக்கஉத்தரவிட்டார்.
25ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்.