3வது பீடாதிபதி: மடத்தின் உள் விவகாரம் என்கிறது ஆர்எஸ்எஸ்
டெல்லி& காஞ்சி:
சங்கர மடத்திற்கு புதிய பீடாதிபதியை நியமிப்பது என்பது மடத்தின் உள் விவகாரமாகும் என ஆர்.எஸ்.எஸ். கருத்துத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் கலவையில் ஜெயேந்திரரை சந்தித்துவிட்டு வந்த பின் தந்த பேட்டியையடுத்து மடத்துக்குவிரைவில் மூன்றாவது சங்கராச்சாரியார் நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் பரவியுள்ளன.
தியாகராஜன் என்ற ஞானபிரசேந்திர சரஸ்வதி இந்தப் பதவிக்குக் கொண்டு வரப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்விஜயேந்திரரின் அனுமதியில்லாமல் 3வது சங்கராச்சாரியாரை நியமிக்க முடியாது இளையவரின் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இப்போதைய பால பெரியவரை (இளையவரை) மகா பெரியவர் தான் தேர்வு செய்தார். ஆனால், அவருக்கு தீட்சை கொடுத்துமடாதிபதியாக நியமித்தது இரண்டாவது இடத்தில் இருந்த ஜெயேந்திரர் தான்.
அடுத்த சங்கராச்சாரியார் நியமனத்திலும் அதே முறை தான் கடைபிடிக்கப்படும். அப்படிப் பார்த்தால், 3வது பீடாதிபதியை ஜெயேந்திரர்நியமிக்க விரும்பி தேர்வு செய்தாலும், அவரை முறைப்படி நியமிக்கும் உரிமை இளையவருக்கே உண்டு என்கின்றனர்.
ஞானபிரசேந்திரருக்கும் இளையவர் தரப்புக்கும் ஒத்து வந்ததே இல்லை என்பதால் அவரை இன்னொரு பீடாதிபதியாக நியமிக்கஇளையவர் ஒப்புக் கொள்வது சந்தேகமே என்கின்றனர்.
இதையடுத்து சங்கர மடத்தில் பூஜைகள் தடைபடாமல் தடுக்க இடைக்கால ஏற்பாடாக ஒருவரை நியமிக்கும் யோசனையில்சங்கராச்சாரியார் இருப்பதாகத் தெரிகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த மடத்தின் இளையவரை தாற்காலிகமாக சங்கர மடத்தில் இருக்கச்செய்து பூஜைகளையும் மற்ற பணிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில்,
மூன்றாவது சங்கராச்சாரியாரை நியமிக்கப்பட இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் கூறியதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. இதுதவறான செய்தி.
3வது பீடாதிபதியை நியமிப்பதாகட்டும், நித்திய பூஜைகளை எப்படி தினமும் தவறாமல் நடத்துவது என்பதாகட்டும், அதை சங்கர மடம்தான் முடிவு செய்யும். இதில் ஆர்.எஸ்.எஸ். தலையிடாது. இது முழுக்க முழுக்க மடத்தின் உள் விவகாரமாகும் என்றார்.