அருணா கொலையாளி பென்னி குஜராத்தில் தற்கொலை!
அகமதாபாத்:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பென்னி என்ற குற்றவாளி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்தற்கொலை செய்து கொண்டார். அவர் பதுங்கியிருந்த வீட்டை தமிழக சிறப்புப் படை போலீசார் சுற்றி வளைத்தபோது விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டதாக குஜராத் போலீஸ் கூறுகிறது.
கடந்த மாதம் 31ம் தேதி ஆலடி அருணா நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டமதுரையைச் சேர்ந்த ஆட்டோ பாஸ்கர் என்ற ரெளடி நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி காவல் நிலையத்தில் மர்மமான முறையில்இறந்தார்.
அவரை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுகிறது. இந் நிலையில் அருணா கொலை வழக்கில் தமிழகபோலீஸாரால் தேடப்பட்டு வந்த இன்னொரு குற்றவாளியான, நாகர்கோவிலைச் சேர்ந்த பென்னி அகமதாபாத்தில் மர்மாக இறந்துள்ளார்.
இவர் தற்கொலை செய்து கொண்டதாக குஜராத் போலீஸ் கூறினாலும் இதிலும் மர்மங்கள் புதைந்துள்ளன.
இது குறித்து அகமதாபாத் நகர துணை போலீஸ் கமிஷ்னர் சுபாஷ் திரிவேதி கூறுகையில்,
பென்னி என்ற பெனடிக்ட் மற்றும் வேல்துரை ஆகியோர் அகமதாபாத்தில் வத்வா என்ற இடத்தில் டாக்டர் மாயா என்பவரது வீட்டில்பதுங்கி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக காவல்துறை தனிப்படையை அனுப்பி வைத்தது.
இந்த தனிப்படை போலீசார் குஜராத் போலீசாருடன் இணைந்து அந்த வீட்டை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது பென்னியும்வேல்துரையும் தப்பி ஓட முயன்றனர். ஆனால், முடியாமல் போகவே இருவரும் விஷம் குடித்தனர்.
இதையடுத்து இருவரும் எல்.ஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் பென்னி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.வேல்துரை உயிருக்குப் போராடி வருகிறார். அவரிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்த முயன்று வருகின்றனர்.
இந்த விஷயத்தில் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றார் துணை கமிஷ்னர் சுபாஷ் திரிவேதி.
இந்த வேல்துரை நெல்லை மாவட்டம் மருதப்பபுரத்தைச் சேர்ந்தராவார்.
இந் நிலையில் நெல்லை சரக டிஐஜி கோபாலகிருஷ்ணன் இன்று திருநெல்வேலியில் நிருபர்களிடம் பேசுகையில்,
அருணா வழக்கில் கைதானவர்கள் அனைவரும் தமிழகத்தின் மிகப் பெரிய கேடிகள். இதில் பென்னி மீது மட்டும் 36 வழக்குகள் உள்ளன.ஆயுள் தண்டனை பெற்று பாளை சிறையில் இருந்தவன் தப்பியோடிவிட்டான். இதே போல வேல்துரை மீதும் 30க்கும் மேற்பட்டவழக்குகள் உள்ளன. இவனும் கோர்ட்டுக்குச் செல்லும்போது போலீசிடம் இருந்து தப்பியவன் தான்.
அருணாவைக் கொல்லும் முன் இந்தக் கொலைக் கும்பல் சென்னை நகைக் கடையில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகைகளைகொள்ளையடித்தது.
பென்னி தற்கொலை செய்து கொண்டுவிட்டான். வேல்துரையை மிகுந்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வர இருக்கிறோம்.இவர்களுக்கு அகமதாபாத்தில் அடைக்கலம் தந்த டாக்டர் மாயாவிடமும் விசாரணை நடக்கும் என்றார் டிஐஜி கோபாலகிருஷ்ணன்.
அருணா கொலை வழக்கில் அடுத்தடுத்து மர்மங்கள் கூடிக் கொண்டே போகின்றன. இந்தக் கொலையில் தொடர்புடையவர்களாகபோலீசாரால் அடையாளம் காணப்பட்ட ஆட்டோ பாஸ்கர் போலீஸ் நிலையத்தில் இறந்த நிலையில், மற்றொரு குற்றவாளியான பென்னிவிஷம் குடித்து இறந்ததாக குஜராத் போலீஸ் மூலமாக தமிழக போலீசார் செய்தி தருகின்றனர்.
முன்னதாக பென்னியை தமிழக சிறப்புப் போலீஸ் படை அகமதாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வந்தன.
இந்தக் கொலை வழக்கில் முதலில் பாலமுருகன் என்பவன், நான் தான் கொலை செய்தேன் என்று கூறிக் கொண்டு நீதிமன்றத்தில்சரணடைந்தான். அவன் தந்த தகவலின் அடிப்படையில் ஆட்டோ பாஸ்கர், திருப்பூரைச் சேர்ந்த அழகர், மதுரையைச் சேர்ந்த நாய் ரவி,திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், பரமசிவன், ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், பென்னிக்கும் வேல்துரையும் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆட்டோ பாஸ்கர் காவல் நிலையத்தில் இறந்துவிட்டான், மரணத்துக்கு முன் போலீசாரின் விசாரணையின்போது, இந்தக் கொலைக்குபென்னியும் வேல்துரையும் தான் பணம் தந்தனர் என்று கூறியிருந்தான் பாஸ்கர்.