இளங்கோவன் மீது நடவடிக்கை கோருகிறது திமுக
சென்னை:
கூட்டணி ஆட்சி தொடர்பாக கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய மத்திய அமைச்சர் இளங்கோவன் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.
இன்று திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் சென்னையில் கூடிய அக் கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருப்பது கூட்டணிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.
அவர் என்னையும் என் குடும்பத்தினரையும் பற்றி தனிப்பட்ட முறையில் தாறுமாறாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். காங்கிரஸ் அலுவலகத்தில்நடந்த எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் எனது ஜாதியைப் பற்றிக் கூட பேசியுள்ளார்.
எனவே இளங்கோவன் மீது காங்கிரஸ் மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
இளங்கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் கூற முடியாது. அது அவர்களது கட்சியின் விருப்பம். ஆனால்நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை சோனியா காந்தி மதித்து நடப்பார் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையைவீணாகாமல் இருக்க வேண்டுமானால், இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தனது தந்தை ஈவிகேஎஸ் சம்பத்தை நான் தாக்கியதாக பொய்யான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இளங்கோவனின் பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தொலைபேசியில் என்னைத்தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்கள். அது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. இதை மனதில் கொண்டு அந்தக் கட்சியினர் பேச வேண்டும்,செயல்பட வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் அவர்கள் அதிகம் பேசுவது அவர்களுக்கு நல்லதல்ல.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? அதற்கு அவர்கள் தயாரா? அப்படிப் போட்டியிட்டுவெற்றி பெற்றால் தாராளமாக அவர்கள் ஆட்சி அமைக்கட்டும், நாங்கள் தடுக்கப் போவதில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான காலமும் கனியவில்லை, அப்படிப்பட்ட முயற்சிகளும் இங்கு பலிக்காது.
மத்தியில் தங்களுக்கு போதுமான மெஜாரிட்டி கிடைத்திருந்தால் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியா அமைத்திருக்கும்?.
கோபியில் (கோபிச் செட்டிப்பாளையம் எம்.பி. தேர்தலின்போது) இளங்கோவனை ஆதரித்து 3 மணி நேரம் கடும் வெயிலில் நான்பிரசாரம் செய்தேன். இதை சத்தியமூர்த்தி பவனில் பேசியபோது இளங்கோவன் மறந்து விட்டார். அப்போது அவருக்கு என் ஜாதிநினைவுக்கு வரவில்லையா?.
ஆனால் இப்போது அதெல்லாம் அவருக்கு ஞாபகத்திற்கு வருகிறது, வருத்தம் தெரிவிக்கிறார்.
ஏதோ, அதையெல்லாம் மறக்காமல் இருக்கிறாரே, அந்த வரையில் சந்தோஷம்தான் என்றார் கருணாநிதி.
இளங்கோவனை அதிமுக தூண்டிவிட்டிருக்கும் என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது, அப்படியும் இருக்கலாம், இல்லாமலும்இருக்கலாம் என்றார் கருணாநிதி.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கிளப்பியதில் இருந்தே திமுகவுடன் அக் கட்சிக்கு மோதல்ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் யாரோ (கருணாநிதி) முதல்வராக நாங்கள் உழைக்க வேண்டுமா என்று கேட்ட இளங்கோவன்,கூடவே கருணாநிதி, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோரையும் தனது வழக்கமான ஸ்டைலில் போட்டு வாங்கினார்.
இதனால் கடுப்பான திமுக தனது உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியது.
இதில் கருணாநிதி தவிர, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்,தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ராஜா,வேங்கடபதி, பழனிமாணிக்கம் மற்றும் குழு உறுப்பினர்கள் 20 பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கருணாநிதியை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கருணாநிதியிடம்தொலைபேசியில் பேசினர்.
மேலும், மத்திய அமைச்சர் இளங்கோவனும் கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக கூட்டத்தில் பெரியஅளவில் அதிரடியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.