அதிரடிப்படையின் அராஜகம்: பிரதமரிடம் பெண்கள் கண்ணீர் முறையீடு
டெல்லி:
வீரப்பன் வேட்டையின்போது தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரால் பாலியல்ரீதியிலும் உடல்-மனரீதியிலும் பலவகைகளிலும் துன்புறுத்தப்பட்ட பெண்கள் பிரதமரைச் சந்தித்து தங்களுக்கு நியாயம் கோரி மனு கொடுத்தனர்.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் பல்வேறு அடாவடிகளைச் செய்தது அதிரடிப் படை. வீடு புகுந்து ஆண், பெண்களைதாக்குதவு, மர்ம உறுப்புக்களில் மின்சாரம் பாய்ச்சுவது, வழக்கே பதியாமல் பல மாதங்கள் சிறை வைப்பது போன்ற கொடுமைகள்நடந்தன.பல பெண்களின் கணவன், தந்தை, மகன்கள் மாயமாக மறைந்து போயினர். இதன் பின்னணியிலும் அதிரடிப் படையினரின்கைவரிசை இருந்ததாக புகார் கூறப்பட்டு வந்தது.
ஆனால், வீரப்பனை வீழ்த்தியதற்காக அதிரடிப்படையினருக்கு விழா எடுத்து வீடு, பரிசு, பதவி உயர்வு தந்த முதல்வர்ஜெயலலிதா, அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்க முன் வரவில்லை.
இதையடுத்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளனர் இந்தப் பெண்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.ராஜா மற்றும் அவரது மனைவி ஆனி ராஜாவின் உதவியோடு அவர்கள் இன்றுபிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கண்ணீர் மல்க தங்களுக்கு நடந்த கொடுமைகளை விளக்கினர்.
தவறு செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் அவர்கள் கோரிக்கைவைத்தனர்.
மேலும் மனித உரிமை ஆணையத்திடம் தாங்கள் தொடுத்துள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடவும் அவர்கள்கோரினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவதாக உறுதியளித்த ரூ. 10 கோடியை தமிழக அரசும், கர்நாடக அரசும் உடனடியாக வழங்கச்சொல்லி உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
முன்பு அதிரடிப்படையில் பணியாற்றிவிட்டு இப்போது வீரப்பன் நடமாடிய காட்டுப் பகுதிகளில் காவல்துறையில் பணியாற்றிவரும் அடாவடி, மிரட்டலுக்குப் பெயர் போன அதிகாரிகளை உடனே அந்தப் பகுதிகளில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்றும் அவர்கள் பிரதமரிடம் கோரினர்.
பெண்கள் பலரும் கதறியபடி தங்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்தபோது, உணர்ச்சிவயப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்,இப்படிப்பட்ட கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கவே கூடாது என்றார்.
மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
முன்னதாக இவர்கள் மனித உரிமை ஆணையத்திடமும், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடமும் இதே கோரிக்கைகளைவலியுறுத்தி மனு கொடுத்தனர். இதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பியான டி.ராஜா இந்தப் பெண்களுக்கு உதவினார்.