கமிஷன் திண்ணும் எம்பிக்கள்: சிக்கினர் 7 பேர்
டெல்லி:
தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்களுக்கு பணம் ஒதுக்க கமிஷன் கேட்டு ரகசிய வீடியோவில் மாட்டியுள்ளனர் 7 எம்பிக்கள்.இதில் 3 பேர் பாஜக எம்பிக்கள், 2 பேர் பகுஜன் சமாஜ் கட்சியினர், ஒருவர் சமாஜ்வாடிக் கட்சியின் எம்பி, இன்னொருவர்காங்கிரஸ் கட்சி எம்பியாவார்.
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு எம்பிகள் லஞ்சம் வாங்குவது சமீபத்தில் அம்பலப்படுத்தப்பட்டது. 11 எம்பிக்கள் லஞ்சம்வாங்கும் காட்சியை ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபர்கள் ரகசிய வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த பரபரப்புஅடங்குவதற்கு முன்பே எம்பிகளின் புதிய ஊழல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்ததொகையை அவர்கள் தங்களது தொகுதியில் தாங்கள் விரும்பும் திட்டத்துக்கு செலவழித்து கொள்ளலாம்.
இந்த நிதியை திட்டப் பணிகளுக்கு ஒதுக்கும்போது எம்பிகள் கணிசமான அளவில் கமிஷன் அடித்து வருகின்றனர். இந்த லஞ்சவிவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புதிய ஊழலில் 7 எம்பிகள் சிக்கியுள்ளனர்.
திட்டங்களுக்கு நிதி ஒதுக்க எம்பிகள் லஞ்சம் கேட்ட காட்சியை ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிருபர் குழுவினர் ரகசிய வீடியோகேமிராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆபரேஷன் சக்ராவியூக் என்று பெயரில் இந்த லஞ்ச விவகாரத்தை ஸ்டார் நியூஸ் வெளியில் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தொலைக் காட்சியின் நிருபர் குழுவினர் தங்களை சமூக நல அமைப்பினர் என்று கூறிக் கொண்டு பாஜக, சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ், காங்கிரஸ் எம்பிக்களைச் சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரினர்.
அப்போது இந்த எம்பிக்கள் கமிஷன் தொகை கேட்டனர். அதை இக் குழுவினர் ரகசிய கேமராக்களில் படம் பிடித்தனர்.
கோவா முன்னாள் முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான சர்ச்சில் அலெமோவிடம் சென்ற இக் குழுவினர் கொங்கனிமொழி வளர்ச்சிக்காக நூலகம் அமைக்க எம்பி நிதியில் இருந்து பணம் ஒதுக்கும் படி கேட்டனர்.
அந்த திட்டத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்க தனக்கு ரூ. 4 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்று சர்ச்சில் கேட்டார். அந்த காட்சியைநிருபர் குழுவினர் ரகசியமாக கேமிராவில் பதிவு செய்தனர். மேலும் நிருபர் குழுவினர் தாங்கள் கொண்டு சென்ற பெரிய பையைகாண்பித்து அதில் லட்ச கணக்கில் பணம் உள்ளதாக கூறினர்.
ஆனால் அலேமாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் பையை திறந்து பணத்தை காட்டும்படி கூறினார். இதையடுத்து நிருபர்கள்அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதே போல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர பிரதாப் சிங், ராம் ஸ்வரூப் கோலி, பக்கன் சிங் குலஸ்தே ஆகிய 3 பாஜகஎம்பிகளும் தங்களது எம்பி நிதியில் இருந்து நல திட்டங்களுக்கு பணம் ஒதுக்க லஞ்சம் கேட்டனர்.
இதையும் நிருபர் குழு ரகசிய கேமிராவில் பதிவு செய்தது. இதில் சந்திர பிரதாப் சிங் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கலஞ்சம் வாங்கியதாக பிடிபட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது பாராளுமன்ற குழு விசாரணை நடந்துவருகிறது.
மேலும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சாக்ஷி மகராஜ், பராஸ்நாத் யாதவ் ஆகியோரும் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு வீடியோவில்பிடிபட்டுள்ளனர்.
இதில் சாக்ஷி மகராஜ் தனது எம்பி நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் ஒதுக்க 4 சதவீதம் லஞ்சம் கேட்டுள்ளார்.
பராஸ் நாத் யாதவிடம் நிருபர் குழு சென்று பேரம் பேசிய போது ரூ. 50 லட்சம் தனக்கு கிடைக்கும் என்று முதலில் நினைத்த அவர்வெறும் ரூ. 50,000 தான் கிடைக்கும் என்று தெரிந்தவுடன் நிருபர் குழுவை வெளியே போ என்று விரட்டியடித்தார். இதுவும்கேமிராவில் பதிவாகியுள்ளது.
இதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இஷான் சிங் நிதி ஒதுக்க தனக்கு ஹரித்வாரில் நிலம் வாங்கித் தர வேண்டும்என்று கேட்ட காட்சியும் கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் மூலம் எம்பிகளின் புதிய ஊழல் வெளிச்சத்துக்குவந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஊழலில் சிக்கிய 7 பேர்களில் 5 பேர் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மீதி இரண்டு பேர் ராஜ்யசபாஉறுப்பினர்கள் ஆவர்.
இந்த ஊழலில் கமிஷன் கேட்டு மாட்டியுள்ள தனது கட்சியின் எம்பியான சர்ச்சில் அலெமோவிடம் முதலில் விசாரணை நடத்தகாங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன் பின்னரே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவா காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஆனால், தன்னை ரகசியமாகப் படம்பிடித்த ஸ்டார் டிவி மீது வழக்குத் தொடரப் போவதாக பிராடு எம்பி அலெமோ கூறியுள்ளார்.
சமாஜ்வாடி எம்பி ராஜினாமா:
இதற்கிடையே இந்த கமிஷன் ஊழலில் சிக்கிய சமாஜ்வாடி கட்சியின் எம்பியான பராஸ் நாத் யாதவை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள இக் கட்சியின் இன்னொரு எம்பியான ஷாக்சி மகாராஜ் ஏற்கனவே கட்சியில் இருந்து விலகியேஇருக்கிறார்.
ரொம்ப யோசித்த பாஜக:
இதற்கிடையே அரசியலில் ஊழலுக்கு இடமில்லை என்று வாய் நிறையப் பேசும் பாஜக இந்த விவகாரத்தில் ஆழ்நிலைதியானத்துக்குப் போய்விட்டது. இந்த விவகாரம் குறித்து நேற்று முதல் இன்று காலை வரை பாஜக தலைவர்கள் யாருமே எந்தக்கருத்தும் தெரிவிக்க மறுத்து வந்தனர்.
இந் நிலையில் சமாஜ்வாடிக் கட்சி தனது எம்பியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாஜகவும் தனது எம்பியும்முன்னாள் அமைச்சருமான பக்கன்சிங் குலஸ்தேவை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டது.
ஆனால், சந்திர பிரதாப் சிங் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட்ஆகியுள்ளார்.
அதே நேரத்தில் இந்த கமிஷன் ஊழலில் பிடிபட்டுள்ள ராம் ஸ்வரூப் கோலி தொடர்பாக ஸ்டார் டிவி வெளியிட்டுள்ள வீடியோதெளிவாக இல்லாததைக் காரணம் காட்டி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என பாஜக அறிவித்துள்ளது.
வரிசையாக ஊழலில் சிக்கும் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து கொண்டே போனால் கடைசியில் நாடாளுமன்றத்தில் கட்சிக்குஎம்பிக்களே இருக்க மாட்டார்கள் என மூத்த தலைவர்கள் கட்சித் தலைமையிடம் வாதாடியதால் எம்பிக்கள் மீது அக் கட்சிநடவடிக்கை எடுப்பது தாமதமானதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் இந்த கமிஷன் விவகாரத்தில் மாட்டிய காங்கிரஸ் எம்பி சர்ச்சில் அலெமோ ராஜினாமா செய்ய வேண்டும் எனகோவா பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
சாட்டர்ஜி நடவடிக்கை:
எம்பிக்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கூறி வரும் லோக் சபாசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இந்த கமிஷன் விவகாரம் வெளியானதையடுத்து, பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட அவர், விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்ட பாஜக,சமாஜ்வாடி, காங்கிரஸ் எம்பிக்கள் அவைக்கு வர தடை விதித்தார்.
நியாயமாக நடந்த சமாஜ்வாடி எம்பி:
ஸ்டார் டிவி குழுவினர் சமாஜ்வாடி எம்பியான தூபானி சரோஜை சந்தித்து சமூக நலத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியபோது,தான் கமிஷன் ஏதும் வாங்குவதில்லை என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டார்.