இலங்கைக்கு உதவ மதிமுக, பாமக கடும் எதிர்ப்பு
சென்னை:
இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் தமிழகத்தில் பெரும் போராட்டம்வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர்கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது. தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதற்கு முன்னிலை வகித்தார்.பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வைகே பேசுகையில்,
முதலில் எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கூட்டம் என்றோ யாரும்நினைக்கக் கூடாது. நடுநிலையுடன் இந்த கூட்டத்தைப் பார்க்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயம் இருட்டடிப்புசெய்யப்படுகிறது.
கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட காரணத்தால்தான் தனி ஈழம் என்ற கோரிக்கை பிறந்தது. தமிழர்களின் வீரம், பண்பாடு, கொடை,குணம், கலாச்சாரம், மானம் ஆகியவற்றைக் கட்டிக் காத்து வருபவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு கொடுமைஇழைக்கப்படுவதைக் கண்டு எந்தத் தமிழனும் அமைதியாக இருக்க முடியாது.
நமது உணர்வுகளை வெளிப்படுத்தினால், நம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். தனி நாடு வேண்டுமா, வேண்டாமாஎன்பதை வெளியுலகில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது. அதை அங்குள்ள தமிழர்கள்தான் தீர்மானிக்க முடியும்.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்தவிதமான உதவியையும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால், இந்த வைகோவைப் போல,தமிழ் இளைஞர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கட்டும். நாம் என்ன செய்துவிடப் போகிறோம் என்று மத்திய அரசு தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டாம்.
இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சை உடனடியாக தொடங்க இந்தியா நெருக்குதல் கொடுக்க வேண்டும்.நார்வே நாட்டு மத்தியஸ்தம் தொடர இந்திய அரசு உதவியாக இருக்க வேண்டும்.
ஈழத்தில் தமிழினத்தில் கொடி பறக்க வேண்டும், தமிழீழம் கட்டாயம் மலரும். அது காலத்தின் கட்டாயம். அதற்கு நாங்கள் துணைநிற்போம் என்றார் வைகோ.
ராமதாஸ்:
ராமதாஸ் பேசுகையில், நமது வேண்டுகோள் தெளிவாக உள்ளது. இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவித உதவியையும் செய்யக்கூடாது. சமரசப் பேச்சுவார்த்தை தொடர இந்தியா, இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம் என்பதாலோ, வைகோ தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதாலோ, நமதுகொள்கையிலிருந்து, உறுதியிலிருந்து பிரள முடியாது.
கடந்த முறை போகாத இடத்துக்குச் சென்று ஆட்சியில் அங்கம் வகித்தபோது நல்ல மனிதரான வாஜ்பாயைசந்தித்தும்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி நான் பேசாமல் வந்ததில்லை. அவரும் ஆதரவாகவே இருந்தார். அதேபோல இந்த மத்திய அரசும் இருக்க வேண்டும்.
இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இங்கே கூடியுள்ள தமிழர்கள் மட்டுமல்ல, ஆறரை கோடி தமிழர்களும்வழிமொழிந்திருக்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் வேண்டுமானால் வழிமொழியாமல் இருக்கலாம்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் நாம் என்றும் துணை நிற்போம். அது தொப்புள் கொடி உறவு என்றார் ராமதாஸ்.
கி. வீரமணி:
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில்,
தமிழர்கள் வாழும் இடம் சுடுகாடு ஆகிவிடக் கூடாது என்பதை சிந்திக்க வைக்க முதல் கூட்டம் நடக்கிறது. விடுதலைப் புலிகளைநாம் காப்பாற்ற வேண்டும். அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.
நாம் வக்கீலாக இருந்து அவர்களுக்காக வாதாட வேண்டும். அங்கே சிறந்த வக்கீல்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு நாம் கேடயமாக இருக்க வேண்டும், அவ்வளவு தான் என்றார்.
இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவி, தளவாட உதவி, தொழில்நுட்ப உதவி என எதையும் வழங்கக் கூடாது. அப்படிவழங்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும். எனவே இதை அனுமதிக்க முடியாது என்பது உள்ளிட்ட பலதீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.