அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா:போராடித் தோற்ற இலங்கை
ஜார்ஜ்டவுன்:இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சை மீறி, தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 8 வெற்றியைப் பெற்றது.
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி கயானாவின், ஜார்ஜ்டவுன் நகரில் நடந்தது.டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான தரங்கா (12), ஜெயசூர்யா (26) ஆகியோர் விரைவாக அவுட் ஆகி விட்டனர்.
தொடர்ந்து வந்த கேப்டன் ஜெயவர்த்தனே, சங்கக்காரா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி தடுமாறியது. இருப்பினும் பின்னர் களம் இறங்கிய தில்ஷன் மற்றும் அர்னால்டு ஆகியோர் நிலையாக, நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.
தில்ஷன் 58 ரன்களும், அர்னால்டு 50 ரன்களும் சேர்த்தனர். இவர்களைத் தவிர மற்ற வீர்ரகள் யாரும் சரிவர விளையாடவில்லை. இதனால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களில் சுருண்டது இலங்கை.
210 என்ற எளிதான வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால் எதிர்பாராதவிதமாக தொடக்க ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஸ்மித்தும், ஆல்ரவுண்டர் ஜேக் கல்லிஸும் நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கினர். ஆனால் லசித் மாலிங்கா ரூபத்தில் வந்தது வினை. அபாரமாக பந்து வீசிய மாலிங்கா அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்து தென் ஆப்பிரிக்காவை நிலை குலைய வைத்தார்.
மாலிங்காவின் அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறத் தொடங்கியது. 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. ஆனால் புத்திசாலித்தனமாக விளையாடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தொட்டது தென் ஆப்பிரிக்கா.
பேட்டிங்கில் சரிவர விளையாடாவிட்டாலும், அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்காவை திணறடித்தது இலங்கை. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக கை வரைக்கும் வந்த வெற்றி வாயை எட்டாமல் போனதால் அந்த அணி பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியது.
5 விக்கெட்டுள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் லாங்வெல்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி:
முன்னதாக நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றியைப் பெற்றது.
ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது போட்டி ஆண்டிகுவாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் நடந்தது. நேற்று முன்தினம் இந்தப் போட்டி நடந்தது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மிக அபாரமாக ஆடி 322 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹைடன் படு அபாரமாக ஆடி 158 ரன்கைளக் குவித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்யவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. ஆரம்பம் முதலே மேற்கு இந்தியத் தீவுகள் அணி ரன் சேர்க்கத் தடுமாறியது.
கெய்ல் 2, சந்தர்பால் 5 என வீழந்தனர். சர்வான் தம் கட்டி 29 ரன்களைச் சேர்த்தார். சாமுவேல்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழ்நதார். முன்னணி வீரர்கள் மளமளவென சரிந்ததால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தடுமாற்றம் அடைந்தது.
இருப்பினும் கேப்டன் லாரா சமாளித்து, நிலைத்து நின்று ஆடி ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். நிதானமாக ஆடிய லாரா 77 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக விக்கெட் கீப்பர் ராம்தின் சிறப்பாக ஆடி 52 ரன்களைச் சேர்த்தார்.
தட்டுத் தடுமாறி ஆடி வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் தனது முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.