27% இட ஒதுக்கீட்டை காக்க மத்திய அரசு முழு முயற்சி-அர்ஜூன் சிங்
டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து சட்டவிழிகளையும் மத்திய அரசு பரிசீலிக்கிறது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
அனைத்து மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து அர்ஜூன் சிங் பேசுகையில்,
மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து சட்டவழிகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின் தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க கடந்த ஆண்டு அரசியல் சட்டத்தின் 15வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்காக மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தோம்.
ஆனால் தமிழகம், ஆந்திரா, கார்நாடகம், உத்தரபிரதேசம், மராட்டியம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்கள் தான் இதற்கான சட்டத்தை நிறைவேற்றி உள்ளன. மற்ற மாநிலங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.
11வது ஜந்தாண்டு திட்டத்தில் மதிய உணவு திட்டம் உயர் தொடக்க கல்விக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான மத்திய திட்ட ஒதுக்கீடு அதிகாரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் திருவனந்தபுரம் மற்றும் போபால் நகரங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (ஐஐஎஸ்இஆர்) நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான ஐஐடி கல்வி நிறுவனம் அமைக்கப்படும். இதுதவிர வரைவு மற்றும் கட்டிடக்கலை படிப்புக்காக விஜயவாடாவிலும் போபாலிலும் 2 புதிய பள்ளிகள் திறக்கப்படும்.
நாடு முழுவதும் மேலும் 20 புதிய ஐஐடி கல்வி நிறுவனங்களை அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இதில் தற்போது ஐஐடி இல்லாத மாநிலங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
சிறுபான்மையினரின் கல்வி அறிவை ஊக்குவிப்பது தொடர்பாக பாத்மி கமிட்டி கூறியுள்ள பரிந்துரைகளையும் பரிசீலத்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications