கலைச்செல்வன் கொலையில் மணல்மேடு சங்கரின் ஆட்கள்- அதிமுக நகர செயலாளர் தலைமறைவு
திருவாரூர்: திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை தொடர்பாக போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மணல் மேடு சங்கரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தத் கொலை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
போலீஸ் எண்கெளண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட முட்டை ரவி-மணல்மேடு சங்கர் ஆகிய ரெளடிகளில் ரவிக்கு கலைச்செல்வன் அடைக்கலம் தந்திருந்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
16 அமைச்சர்கள்-எம்பிக்கள்:
கலைச்செல்வனின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட 16 அமைச்சர்களும் திமுக எம்பி, எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதற்கிடையே கலைச்செல்வனை கொலை செய்து விட்டு டாடா சுமோவில் தப்பிய 9 பேரில் செல்வம், கிருஷ்ணகுமார், குரங்கு செந்தில், சரவணன், காக்கா வீரன் ஆகிய 5 பேர் உடனடியாக நேற்றே பிடிபட்டுவிட்டனர்.
இந் நிலையில் இன்று மணல்மேடு சங்கரின் வலது கரமான மணல்ேமடு சதாசிவம், கலைவாணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக கொரடாச்சேரி பேரூராட்சி துணை தலைவரும் அதிமுக நகரத் தலைவருமான செந்தில் குமார் உள்ளிட்ட மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். செந்தில் குமார் தலைமறைவாகிவிட்டார்.
காக்கா வீரன்:
கைதானவர்களில் காக்கா வீரன் மதுரையை அடுத்த கருமாத்தூைரச் சேர்ந்த ராஜூ தேவரின் மகன் ஆவார். கூலி வேலை செய்து வந்தவர்.
அடிதடி, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் ஆகிய வேலைகளை செய்து வந்த இவர் 1995ம் ஆண்டில் மதுரை தத்தனேரியில் வைத்து கராத்தே பாண்டியராஜ் என்பவரை கொலை செய்தார். இதைத் தொடர்ந்து மேலும் 4 கொலைகளையும் செய்த காக்கா குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்துள்ளார்.
திருமணம் செய்வதற்காக ஜாமீனில் வெளியே வந்த காக்கா அப்படியே எஸ்கேப் ஆகி தலைமறைவாகிவிட்டார். அவரை ேபாலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்த நிலையில் இப்போது தான் பூண்டி கலைச்செல்வன் கொலையில் போலீசாரிடம் மாட்டியுள்ளார்.
இவருடன் பிடிபட்ட கிருஷ்ணனும் மதுரையை சேர்ந்தவர் தான். இருவரும் ஜெயிலில் நண்பர்கள் ஆனார்களாம். இருவருமே கூலிக்குக் கொலை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால் இவர்களைத் தூண்டிவிட்டது செந்தில் குமார் மற்றும் மணல்மேடு சதாசிவம் ஆகியோராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏடிஜிபி விஜய்குமார் விசாரணை:
ஏடிஜிபி விஜய்குமார் சம்பவ இடத்துக்குச் சென்றதோடு, கைதாகியுள்ள காக்கா வீரனிடமும் கிருஷ்ணனிடமும் தனது ஸ்டைலில் விசாரணை நடத்தினார். அப்போது பல தகவல்களை விஜய்குமாரிடம் இருவரும் கக்கியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் மேலும் பலர் கைதாகலாம் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவினரின் வீடுகள் தரைமட்டம்:
இதற்கிடையே கலைச்செல்வன் கொல்லப்பட்டதையடுத்து 4 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு திருவாரூர் பகுதியில் அதிமுகவினரின் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. சிலரது வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
கொரடாச்சேரி பேரூராட்சி துணை தலைவர் செந்தில்குமார், அவரது ஆதரவாளர்களான செல்வம் உள்ளிட்ட 5 அதிமுகவினரின் வீடுகளை திமுகவினர் பொக்லைன் வாகனத்தைக் கொண்டு இடித்து தள்ளினர்.
மேலும் 15 கடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு மினி லாரிக்கும் தீ வைக்கப்பட்டது.
இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பஸ்கள் நிறுத்தம்-பாதை மாற்றம்:
திருச்சி, தஞ்சையில் இருந்து கொடராச்சேரி வழியாக திருவாரூர், வேளாங்கண்ணி செல்லும் பஸ்கள் மன்னார்குடி வழியாக வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. அதேபோல் திருச்சி-திருவாரூர் இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போது நிலைமை சகஜமானதையடுத்து பஸ்-ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.
கொலைக்கான காரணங்கள் என்ன?:
3 ஆண்டுகளுக்கு முன் கொரடாச்சேரியை சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளியான கோவி.சம்பத் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பூண்டி கலைச்செல்வன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு தரப்புக்குமே மோதல் இருந்து வந்தது. சம்பத்துக்கு எதிரியான திருச்சியை சேர்ந்த ரெளடி முட்டை ரவிக்கு பூண்டி கலைச்செல்வன் அடைக்கலம் தந்திருந்தார்.
அப்போது முட்டை ரவிக்கு எதிர் கோஷ்டியான மணல்மேடு சங்கர் கோஷ்டி ரவிக் கொல்ல முயன்றது. அப்படி நடந்த ஒரு தாக்குதலில் பூண்டி கலைச்செல்வனின் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.
இந் நிலையில் தான் மணல்மேடு சங்கரின் ஆதரவாளரான குற சிவா வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக முட்டை ரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பும் அடிக்கடி மோதிக் கொண்டு பொது மக்களிடையே பீதியை பரப்பி வந்த நிலையில் தான் மணல்மேடு சங்கரையும், முட்டை ரவியையும் அரசியல் நெருக்கடிகளை எல்லாம் தாண்டி எண்கெளண்டரில் போட்டுத் தள்ளினர் போலீசார்.
இந் நிலையில் தான் பூண்டி கலைச்செல்வன் கொல்லப்பட்டுள்ளார்.