திருவாரூரில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு-ஜெ கண்டனம்
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன் விரோதம் காரணமாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூடி கலைச்செல்வன் கடந்த 17ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அைதத் தொடர்ந்து நான்கு அரசு பேருந்துகளும், மினி லாரி ஒன்றும் தீ வைக்கப்பட்டதுடன் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
அதிமுகவைச் சேர்ந்த கொரடாச்சேரி பேரூராட்சிக் கழகச் செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான கோவிந்தராஜ், திருவாரூர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் கவ்தியா ஆகியோரது வீடுகளும், கொரடாச்சேரி பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர் வின்சென்ட் காளிதாஸ் உள்ளிட்டவர்களின் கடைகளும் காவல் துறையினரின் முன்னிலையில் திமுகவினரால் சூறையாடப்பட்டிருக்கின்றன.
கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுத்தவனிதம், காவலாக்குடி, குளிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினரின் துணையுடன் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக, சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஏழை-எளியோரின் வீடுகள் (அதிமுகவினரின் வீடுகள்) தகர்க்கின்ற கொடூர நிகழ்ச்சிகளும் நடந்தேறியிருக்கின்றன.
இவற்றுடன் மட்டுமல்லாமல் சம்பவம் நடந்த 17ம் தேதி அன்றைய தினம் மாணவ-மாணவியர்கள் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய செய்தியாகும்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. இதை நான் பலமுறை ஆதாரத்துடன் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கின்றபோது காவல்துறையினர் அவர்கள் கொடுக்கும் புகார்களை வாங்க மறுக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பேருந்துகளை இயக்கவிடாமலும், கடைகளை முற்றிலுமாக அடைத்தும் திமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியுடன் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வெட்கக் கேடான வேதனையளிக்கக் கூடிய செயலாகும்.
இந்த மாவட்டத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுப்பதையும், காவல்துறையினரை வைத்து அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதையும் விட்டு விட்டு, திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.