எம்.எஸ்.ஓ. களத்தில் குதிக்கும் அழகிரி?
தமிழகத்தைப் பொறுத்தவரை சுமங்கலி கேபிள் விஷன் எனப்படும் எஸ்.சி.வி.யின் ஆதிக்கமே அதிகம். அதேசமயம் சென்னையில் எஸ்.சி.விக்குப் போட்டியாக திகழ்வது மும்பையைச் சேர்ந்த ஹாத்வே.
சென்னையின் ஒரு பகுதியை எஸ்.சி.வி வைத்துள்ளது. இன்னொரு பகுதியை ஹாத்வே வைத்துள்ளது. கடந்த காலங்களில் திமுகவுடன், சன் டிவி குழுமம் கொண்டிருந்த நெருக்கம், அதிகார பலம் உள்ளிட்டவை காரணமாக ஹாத்வே நிறுவனம் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பலவகை பலத்தைப் பயன்படுத்தி ஹாத்வே நிறுவனத்தின் கேபிள் வயர்கள் வெட்டி வீசப்பட்ட வரலாறும் உண்டு. இப்படி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாத்வே இப்போது புதிய காப்பாளரை அழகிரி வடிவில் கண்டுள்ளது.
சன் டிவி குழுமத்திற்கு எதிராக படு தீவிரமாக அழகிரி களம் இறங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஹாத்வே பக்கம் அவர் திருப்பி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சன் டிவி குழுமத்தால் பாதிக்கப்பட்ட ஆபரேட்டர்கள், சன் டைரக்ட் டிடிஎச் சேவையை விரும்பாத ஆபரேட்டர்களை முதல் கட்டமாக அவர் ஹாத்வே பக்கம் கையைக் காட்டி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர எஸ்.சி.வியின் கீழ் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஆபரேட்டர்களையும் அவர் ஹாத்வேக்கு இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் எஸ்.சி.வி. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சரமாரியாக கைது செய்யப்படுவதாக புகார் கூறியுள்ளார் தயாநிதி மாறன்.
ஆனால் இந்தப் புகார்களை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தி.நகரைச் சேர்ந்த கிஷோர் குமார் மற்றும் கே.கே.நகரைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய இரு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது புகார் வந்தது. இதையடுத்து இருவரையும் பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர். அவர்களும் விசாரணைக்குச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றார் அவர்.
சன் குழுமத்திற்கும், திமுக தரப்புக்கும் இடையிலான கேபிள் போரின் ஒரு கட்டமாகத்தான் தயாநிதி மாறன் புகாரும், அழகிரி மீதான இன்னொரு தகவலும் வெளிக் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.