பால் விலை லிட்டருக்கு ரூ. 7 உயர்வு-மக்கள் 'மயக்கம்'
மதுரை ஆவின் பால் நிறுவனம் அதிக கொழுப்பு சத்துள்ள பால் (எல்.சி.எம்.) மற்றும் பிரிமியம் (எஸ்.எம்.) ரக பாலை விற்று வருகிறது.
நேற்று வரை எப்.சி.எம். ரக பால் லிட்டர் ரூ.18க்கு விற்கப்பட்டது. பிரிமியம் பால் ரூ.17க்கு விற்கப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை இவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இன்று மதுரையின் பல பகுதிகளிலும் எல்.சி.எம். ரக பால் லிட்டர் ரூ.25க்கும், பிரிமியம் ரக பால் ரூ.23க்கும் விற்கப்பட்டது.
அதே போல தயிர், மோர், ரோஸ் மில்க்கின் விலைகள் ரூ. 1 உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோல பால் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் 4 ரூபாயும் சில இடங்களில் 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு நிர்ணயித்த விலை
ஆனால், அரசு நிர்ணயித்த விலை உயர்வின்படி டோண் செய்யப்பட்ட பால் அட்டை மூலம் ரூ.15.75க்கும், சில்லரை விலையாக ரூ.18க்கும் தான் விற்கப்பட வேண்டும்.
அமைச்சர் கடும் எச்சரிக்கை:
இது குறித்து பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன் கூறுகையில்,
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது. இதன் காரணமாக விற்பனை விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே லாப நோக்கம் இல்லாமல் சமன்படுத்தப்பட்ட பால் விலை லிட்டருக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பால் என்ன விலைக்குவிற்கப்பட வேண்டும் என்பது குறித்து, விற்பனையாளர்களுக்கு முன்னதாகவே விலை விபரம் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டு விட்டது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு சிலர் விற்பதாக புகார்கள் வருகின்றன. ஆவின் பால் நிர்ணயிக்கப் பட்ட விலைக்குத்தான் விற்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் விலைக்கு விற்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட பால் விற்பனையாளர்களுக்கு, ஆவின் பால் விற்பனை செய்யும் அனுமதி ரத்து செய்யப்படும்.
ஆவின் பால் விற்பனை செய்யும் இடங்களிலும் சில்லரையாக ஆவின் பால் விற்பனை செய்யும் கடைகளிலும் பால் விலை பட்டியலை கண்டிப்பாக தொங்க விட வேண்டும்.
அமைச்சரின் செல்போன் நம்பர்:
கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் அது குறித்து பொது மக்கள் 18004253300 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.
என்னையும் எனது செல்போனில் தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் புகார் தரலாம். எனது செல் நம்பர் 9442476222 என்றார் மதிவாணன்.