மீண்டும் கொலை நகரமாகும் நெல்லை!
தமிழையும் சுதந்திரப் போராட்ட உணர்வையும் வளர்த்த இந்த வீர மண்ணில் இன்று கோரக் கொலைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டது.
கொஞ்ச காலமாக மாவட்டத்தில் அமைதி நிலவுவது போலத் தெரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் அரிவாள் கலாச்சாரம்...கட்ட பஞ்சாயத்து...போன்றவை அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் கீழநத்தம் வடகூர் பகுதியைச் சேர்ந்த சிவன் மகன் பாலமுருகன் மர்மமான முறையில் காணாமல் போனார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு வந்த கடிதம் பாலமுருகன் இறந்து விட்டதாகவும், அவர் எப்படிச் சொத்தார் என்பதையும் விரிவாகச் சொன்னது.
அக்கடிதத்தின் மூலம், நெருங்கிய உறவினர்களான மதார், ராமன், பெத்தபெருமாள், சரவணன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசியது தெரியவந்தது. இதில் மதார் என்பவர்தான் நாயகன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவருக்கு கீழ் பெரும் கும்பலே செயல்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மதார் 1999ம் ஆண்டு தென்காசி அருகேயுள்ள சாம்பவர் வடகரையில் நடந்த 3 பேர் கொலை, போலீஸ் ஏட்டு வேலாண்டி மகன் சுந்தர் கொலை, அடிதடி இப்படி பல வழக்குகளும் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் பிரபல தாதாவாக விளங்கும் இவரை எதிர்த்து நீதிமன்றத்தில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்களாம். அவர்கள் கதியும் பரிதாபம்தானாம். மானூர் காவல் நிலையத்திலேயே கட்டப் பஞ்சாயத்து செய்வது இவரது சிறப்பாம்.
இந்த மதார் இதுவரை 7 கொலைகள் செய்துள்ளதாகவும், அதில் 3 கொலைகளிலில் மட்டுமே இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
தற்போது சிறையில் இருக்கும் மதாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதார் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பின்புதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தென்மண்டல ஜ.ஜீ சஞ்சிவ் குமார் மானூர் காவல் நிலையத்திற்கு திடீர் விசிட் செய்து விசாரணை நடத்துகிறார். முதற்கட்டமாக உளவு பிரிவு ஏட்டு சுடலை என்பவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.