'போன் செய்தால் போஜனம்'-ரயில்களில் புது திட்டம்!
சென்னை: ரயில் பயணத்தின்போது, போன் செய்து உணவுக்கு ஆர்டர் செய்தால் நமது இருக்கைக்கே உணவை கொண்டு வந்து தரும் புதிய திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகள் வசதிக்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த வரிசையில் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) டயல் ஏ மீல்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி என்ன சாப்பாடு வேண்டும் என்பதை ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது போன் மூலம் ஆர்டர் கொடுக்கலாம். இருந்த இடத்திற்கே சாப்பாடு அல்லது டிபனை கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வீட்டில் இருந்தபடியும் சைவம் அல்லது அசைவம் உணவு, டிபன், கேக் போன்றவற்றிற்கு டெலிபோனில் ஆர்டர் கொடுக்கலாம். ரயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி புட்-பிளாசா டெலிபோன் நம்பரில் தொடர்பு கொண்டு, பயணம் செய்யும் ரயிலின் பெயர், பெட்டி மற்றும் சீட் எண்ணை குறிப்பிட வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் உணவை டெலிவரி செய்து விடுவார்கள்.
ரயில் பெட்டிக்கே வந்து சாப்பாடு வழங்கும் திட்டம் சென்னை சென்டிரல், எழும்பூர், திருச்சி, மதுரை, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர, கேரளா மாநிலம் எர்ணாகுளம், சோரனூர், திருச்சூர், திருவனந்தபுரம், கர்நாடக மாநிலம் பெங்களூர், ஆந்திர மாநிலம் விஜயவாடா, செகந்திராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி ஆகிய இடங்களிலும் இந்த திட்டம் அமலில் உள்ளது.
இந்த திட்டத்தைப் போல டெலிபோனில் 139 எண்ணை அழைத்தால் ரயில் பயணிகளுக்கு டாக்ஸியும், சாப்பாடும் ஏற்பாடு செய்து கொடுக்கும் மற்றொரு புதிய திட்டம் அடுத்த சில மாதங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் தங்களது ஊரில் இருந்தபடியே 139 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து தங்குவதற்கு விடுதியும், சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக டாக்ஸியும் ஏற்பாடு செய்யும்படி கூறலாம். இந்த வசதி சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ரயில்வே கால்-சென்டர் சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் இந்த கால்-சென்டரை 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ரயிலின் வருகை, புறப்பாடு, ரயில்களின் பட்டியல், பி.என்.ஆர். நிலை, கட்டண விவரம், தட்கல் நிலவரம், சலுகை விவரங்கள் மற்றும் இதர தகவல்கள் கால்-சென்டரில் கிடைக்கின்றன.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 11 மொழிகளில் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கால்-சென்டர்களுக்கு தினமும் 5 லட்சம் அழைப்புகள் வருகின்றனவாம்.












Click it and Unblock the Notifications