இன்று ஆளுநருடன் சோரன் சந்திப்பு - கோடா அரசு கவிழ்கிறது?
மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. அதற்குப் பிரதியுபகாரமாக மத்திய அமைச்சர் பதவியை கோரினார் அக்கட்சியின் தலைவர் சிபுசோரன். இந்த நிலையில் தற்போது திடீரென ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளார் சோரன்.
ஆனால் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ள காங்கிரஸ் கட்சியின் மது கோடா பதவி விலக முடியாது என கூறி வருகிறார். இதுதொடர்பாக கட்சி விடுத்த கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.
கோடா விலகாவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என சோரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று மாநில ஆளுநர் சையத் சிப்தே ரஸியை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டச்சார்யா சந்தித்தார். அவரிடம் சிபு சோரன் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அதை ஏற்று நேரம் ஒதுக்கியுள்ளார் ஆளுநர். அதன்படி இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் சிபு சோரன்.
இந்த சந்திப்பு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. கோடா அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை சோரன் வாபஸ் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 13ம் தேதி டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர் சோரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மது கோடாவை பதவி விலகுமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மேலிடம் உத்தரவிட்டு விட்டது. ஆனால் அவர் மறுத்துவருகிறார்.
ஜார்க்கண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதுகுறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
ஆகஸ்ட் 17ம் தேதி எங்களது கட்சியின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே கோடா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சிபு சோரன் இன்று திரும்பப் பெறலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம், தனது அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்ைல என்று மது கோடா கூறியுள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறது. கட்சி மேலிடம் எனக்கு இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, விலகச் சொல்லி யாரும் என்னை கேட்கவில்லை என்றார்.
இதற்கிடையே, சிபு சோரன் முதல்வராகலாம், ஆனால் அரசுக்குரிய பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் முதல்வர் பதவிக்கு அவர் வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளன.
மது கோடா தலைமையிலான அரசுக்கு தற்போது 43 எம்.எல்.ஏக்கள் (சட்டசபையில் மொத்த இடம் 82) ஆதரவாக உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் கட்சிக்குத்தான் அதிகம் பேர் உள்ளனர். அதாவது 17 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 7, ராஷ்டிரிய ஜனதாதளம் 9, யுஜிடிபி 2, தேசியவாத காங்கிரஸ் 1 மற்றும் சில சுயேச்சைகள் அடங்குவர்.
சுயேச்சைகளில் 5 பேர் மது கோடா அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இவர்களில் ஸ்டீபன் மராண்டி துணை முதல்வராக உள்ளார். இவர்கள் ஐந்து பேர் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர் ஆலம்கீர் ஆலமிடம் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திலும் பொது நலன் வழக்கு போடப்பட்டுள்ளது.
சுயேச்சை எம்.எல்.ஏக்களில் மாநில இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள பந்து திர்கே மட்டுமே சிபு சோரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.